செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




செவ்வாய், 5 ஜூலை, 2011

எளிய ஆகம பூஜா முறை..



  • விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)
  • பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
  • விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
  • பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
  • விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
  • துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
  • மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
  • வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
  • அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
  • தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
  • வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
  • சம்பக மொட்டுத் தவிர,  வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
  • மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
  • முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
  • துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
  • பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
  • திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார  தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
  • அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
  • குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
  • பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
  • கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?




ண்ணனுக்கு அறிவில்லையா? அவன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.ஒருவன் இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.

வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும் ,உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்.



வாழ்க வளமுடன் 
க .செந்தில்குமார் 

ஆன்மாவைத் தெரியுமா?



ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.
நால்வகைத் தோற்றங்கள்:
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் வியர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன.
எழுவகைப் பிறப்புகள்:
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.
கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.
தேவர்கள் பதினொரு நூறாயிர யோனி பேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம், நாற்கால் விலங்குகள் பத்து நூறாயிரயோனி பேதம், பறவை பத்து நூறாயிரயோனி பேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிரயோனி பேதம், தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனி பேதம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதம்.
ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும். புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.
ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும். இப்படியே,தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும், காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.
இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.
இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வாழ்ந்து அழியினும் அழியும். மூன்று வயதுக்கு மேல் பதினாறு வயது வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயது வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

பக்திக்கு வழிகாட்டும் பெரிய புராணம்..



தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புக்கள் பல வகைப்படும். உலக மொழிகள் எதிலும் இன்று வரை காண முடியாத பொருள் அதிகாரம் பற்றிப் பேசும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ள தொல்காப்பியம் இன்றும் நமக்குக் கிடைக்கும் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகும். தனித்தன்மை பெற்றுத் தொல்காப்பியம் விளங்குவது போலவே, சமய இலக்கியம் என்ற பகுதியும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பைப் பெற்றுள்ள சிறப்பு உலக மொழிகள் அனைத்திலும் தமிழுக்கு கிடைத்த வாய்ப்புகள் போல வேறு எந்த மொழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அளவு கொண்டு கணக்கிட்டால் கூடத் தமிழ் மொழியில் உள்ள பக்திப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழுக்கு அடுத்த இடத்தை பெறுவது வடமொழியன்று. ஹீப்ரு மொழியே என்று மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர். சங்க காலந்தொட்டு இடையீடு இன்றி, வளர்ந்த தமிழர் வாழ்வும், இலக்கிய வளர்ச்சியும் களப்பிரியர் இடையீட்டால் தடைப்பட்டன. மறுபடியும் அந்த வளர்ச்சியும் அதன் போக்கும் முற்றிலும் மாறி புதிய முறையில் தமிழ் இலக்கியம் வளரத் தொடங்கிற்று.
இவ்வாறு தோன்றிய புதிய வாழ்க்கைமுறை, குறிக்கோள்கள், பக்தி இயக்க காலம் என்று கூறலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை உள்ள 5 நூற்றாண்டு காலத்தை பக்தி இயக்கக் காலம் என்று கூறலாம். இந்தக் காலத்தின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தனார் முதன் முதலாகத் தேவாரம் பாடத் தொடங்கினார்.12 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஆழ்வார்களும் தோன்றி வைணவ சமயத்தை வளர்த்தனர்.

7-ம் நூற்றாண்டில் பல்லவ அரசு தோன்றியது. பல்லவர்கள் தொடக்கக் காலத்தில் தமிழினிடத்து எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. வட மொழியினையே ஆதரித்தனர். வேத வழக்கொடுபட்டவர்கள் வேதங் கூறும் வேள்விகளையே செய்தனர். தமிழகம் வந்து குடியேறிய வைதிகர்களின் செல்வாக்கு ஓங்கி நின்றமையின் காரணத்தால் சைவத்திற்க்கும், தமிழுக்கும் ஊறு விளைய ஏதுவாயிற்று.
புற சமயமான சைனம், பௌத்துவத்தால் இடையூறுகள் நேர்ந்தன. இந்த வைதிகர், சமணர்கள், சைனர் [களப்பிரர் மரபினர்] பௌத்தர் என்பர் அனைவரும் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஏற்காதவர்கள். இந்நிலையில் தோன்றியவர் திருஞான சம்பந்தர். புறச் சமய எதிரிகளை வென்றதுடன் அகச் சமயமாகிய வைதிகத்தையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

சைவ சமய இலக்கியங்களில் மணிமுடியாக விளங்குகின்ற பெரிய புராணத்தைத் தோன்றிய காலச் சூழ்நிலை, சைவ சமய வளர்ச்சியில் இப்பெரும் நூலின் இடம், இலக்கிய வரிசையில் காப்பிய இடத்தினை பெறுகிறது. மாபெரும் புரட்சியைச் செய்து தமிழ் மொழியை நிலை நிறுத்தியவர் திருஞான சம்பந்தரே என்ற பேருண்மையை நமக்கு காட்டியவர் சேக்கிழார்.
தேவாரம் முதலியவற்றில் உள்ளந் தோய்ந்து இருந்த சேக்கிழார், '' நாயன்மார்களின் வரலாறு மூலம் மக்களைத் தட்டி எழுப்பி, வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கும்'' என்ற ஒரு முடிவுக்கு வந்தார். நம்பியாரூரார் பாடிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே பாட வேண்டும். முடிபும் அதை ஒட்டி வந்ததேயாகும். அதன் பயனாகத் தோன்றியது இந்தப் பெரிய புராணம்.
சென்னை நகரத்திலிருந்து பதினைந்து மைல் கல் தூரத்திலுள்ள குன்றத்தூர் சிறிய ஊர். மிகப் பழைய இந்த ஊரில் கல்வி கேள்விகளில் சிறந்த வேளாளப் பிரிவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்தார் சேக்கிழார். [ இவரின் காலம் கி.பி 1133 -1180 வரையிலாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.] சேக்கிழார் என்பது அவரின் மரபு பெயராகும். அவரின் இயற்பெயர் 'அருள்மொழித்தேவர்' என்பதாகும்.
அந்தக் காலத்தில் சோழ மண்டலத்தின் அதிபதியாயிருந்த அநபாயச் சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரின் கல்வி அறிவு, ஒழுக்கங்களைக் கேள்விப்பட்டு, அவரைத் தனது தலைநகராகிய பழையாறைக்கு வரவழைத்து, தமக்கு முதல் மந்திரியாக நியமித்து, உத்தம சோழ பல்லவர் என்ற பட்டமும் கொடுத்து சிறப்பித்தான். பழையாறைக்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்து இறைவன் பேரில் ஈடுபாடு கொண்ட சேக்கிழார் பிற்காலத்தில் தன் சொந்த ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என்னும் ஒரு கோயிலைக் கட்டி வைத்தார்.
அந்தக் காலத்தில் வெளிவந்த தமிழ்க் காப்பியமாகிய சீவகசிந்தாமணி தமிழ் உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சோழ மன்னன் அநபாயனும் அந்தக் காப்பியத்தை இரசித்துப் படித்ததைக் கண்ட மந்திரி சேக்கிழார், சைவனாகிய தமது அரசர் சமண இலக்கியமான சீவகசிந்தாமணியில் ஈடுபாடு கொண்டிருப்பது மிகவும் கவலை தந்தது. " அரசே, சைவ சமயத்தவராகிய தங்கள் வேதத்தையும் இறைவனையும் பழிக்கும் சமண இலக்கியத்தைப் படிப்பது பொருத்தமல்லவே " என்று சொன்னார்.
அநபாயனுக்கு இது தெரியாததல்ல. "சமணர்கள் செய்தது போல நமது சைவர்கள் ஒன்றும் செய்யவில்லையே, அப்படியான சிவ சரிதம் ஏதாவது உண்டா?" என்று கேட்டான்.
சிவனது பெருமையைப் பேசும் தொண்டர்களைப் பற்றி தேவார நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தில் அறுபத்து மூன்று தனி அடியார்களைப் பற்றியும் மற்றும் சில தொகை அடியார்களைப் பற்றியும் எடுத்து கூறினார்.
சிவன் நாமத்தை மட்டும் மறவாது வழிப்பட்டு வந்தபோதும், அச்சமயம் சோழ மண்டலத்தில் சமணம், பௌத்தம், சைவம் போன்ற சமயங்கள் சமய பூசல்கள் காரணமாக ஒன்றுக் கொன்று போட்டி போட்டுக் கொண்டு செல்வாக்கை தேட ஆரம்பித்தன.
இருண்ட காலத்தில் போய்க்கொண்டு இருந்த சைவ சமயத்தைக் காப்பாற்றி கரையேற்ற எண்ணங் கொண்ட சேக்கிழார், முதலில் சமய நூல்களில் மனதைப் பறிகொடுத்த மன்னரையும், மக்களையும் காப்பாற்ற எண்ணங் கொண்டார். தனது அறிவாற்றல் மூலம் சைவ சமயத்தின் சிறப்பியல்களையும், அது தன்னகத்தே கொண்டுள்ள அறிய கருத்துக்களையும், கருத்து சொறிந்த நூல்களளையும், சிவநெறி நின்ற சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கதை உருவில் மிகச்சுவைபடக் கூறி, மன்னரையும், மக்களையும் தன் வசமாக்கினர்.

மனுநீதி கண்ட சோழர், அமர் நீதிநாயனார், திருநாவுக்கரசு, திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்ற சிவனடியார் வாழ்க்கை வரலாறு எல்லாம் சேக்கிழார் வாயிலாக கேட்டு களிப்படைந்த அனபாய சோழர் சேக்கிழாரிடம் " அமைச்சரே, சைவமும், தமிழும் என்றும் தழைத்தோங்க கூடிய கருத்துக்களை எல்லாம் ஒன்றாக்கி, என்றும் அழியாப் புகழ் தரக்கூடிய புராணம் ஒன்றினை செய்தருள வேண்டும்" என விழைந்தான்.

"அந்த அற்புதமான அடியார் சரிதங்களை எல்லாம் இலக்கிய நயம்பட ஒரு பெருங்காப்பியமாக அருளினால் தமிழ் மக்கள் சிறப்பாகச் சைவ நன்மக்கள், படித்து ரசிக்க வாய்ப்பளிக்கும். இலக்கிய விற்பன்னராகிய தாங்களே அதைச் செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டான்.
அருள்மொழித் தேவராகிய சேக்கிழார் மகிழ்ந்து அந்த அன்பு கட்டளையினை ஏற்றுக் கொண்டு "பெரிய புராணம்" என்னும் பெருங்காப்பியத்தைப் பாடினார்.

இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, அவனாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுச் சுந்தரர் பாடிய பாடலிலேயே குறுகிய வட்டத்தை விட்டு அனைத்துலத்தையும் அணைத்துக் கொள்ளும் பார்வை இருப்பதைச் சேக்கிழார் அறிந்து கொள்கிறார். சேக்கிழாருக்கு கூட அடியெடுத்துக் தந்த இறைவன் '' உலகெலாம்'' என்றுதான் அடியெடுத்துத் தந்தான். அதில் சைவர்கள் என்றில்லாமல் உலக முழுவதிலும் எல்லாக் காலத்திலும் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் மக்கள் இலக்கணத்தை வகுத்துள்ளது

சிதம்பரம் வந்து , கனகசபையில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமானை வணங்கி நின்று சிந்தித்த போது, இறைவனே முன் வந்து " உலகெலாம் '' என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்க அருளினார். அதன்படியே,
உலகெலாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவன்... '
நீர்மலி வேணியன் அழகில் சோதியன்
அம்பலத்து இடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

-என்ற காப்புச் செய்யுளுடன் தொடங்கி,

''என்று மின்பம் பெருகு மியல்பினால்
ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.''

-என்ற வார்த்தையுடன் சிதம்பரம் பொற்றாமரை வாவிக்குப் பக்கத்திலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து, அற்புதமான தமது பெரிய புராணத்தைப் பாடி முடித்தார்.

சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து பெரிய புராணக் காப்பியம் பாடி முடித்தவுடன் சோழ மகாராஜா தாமே நேரில் சென்று தமது பட்டத்து யானையில் சேக்கிழாரையும் பெரிய புராணக் காப்பிய ஏட்டையும் அமர்த்தி, புலவர் பின்னால் தாம் உட்கார்ந்து சாமரம் வீசி ஊர்வலம் வந்தான். மந்திரி பதவி பெற்றிருந்த சேக்கிழார், பதவியைத் துறந்து, சிதம்பரத்தில் தானே வீற்றிருந்து இறைபணி செய்து வந்தார். அநபாயச் சோழன் அவருடைய பாராட்டி "தொண்டை சீர் பரவுவார்''  என்ற பட்டம் சூட்டி வாழ்த்தினான். இவரின் பெரும் முயற்சியால் நாம் அறுபத்திரண்டு நாயன்மார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது.

சேக்கிழார் சிவநேயச் செல்வர். சிவ திருவடிகளின் நிழலே சரண் எனப் புகுந்தவர். சிவனின் இன்னருளிலேயே தோய்ந்து திளைத்தவர். அந்த நிலை தளராத முயற்சியால் பலருக்கு கிட்டுவது என்றாலும், சேக்கிழார் இந்த நிலைக்கு மேலே சென்று விடுகிறார். காணும் பொருளிலே சிவத்தை காணும் உன்னத நிலையை அடைகிறார். அந்த உயர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவருடைய உள்ளம் முகிழ்ந்திருந்த போதே பெரிய புராணம் மலர்ந்துள்ளது. அதனால்தான் அவ்வளவு பெரிய உள்ளங்களை எல்லாம் சேக்கிழாரால் கவிதைகளில் கொண்டு வர முடிந்தது. இதனை பெரிய புராணம் இலை மறை கனியாகக் காட்டுகிறது.

"இறைவன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடுக என்றமையால்தான் யான் பாடுகிறேன்''
-என்ற கருத்தில்...

"அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும்
தெருளில் நீர் து செப்புதற்கு ஆன் எனின்
வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல்வாம் அன்றே"
-என்று கூறுவது இவர் அருள்வழி நின்று இதனைப் பாடலுற்றார் என்பதற்கு அகச் சான்றாகும்.

இளம் பிராயம் முதல் சிவபிரானிடம் மாறாத பக்தியும், தணியாத பாசமும் கொண்டு சிவ நேசராக விளங்கிய சேக்கிழார் கல்வி கேள்விகளிலும் தமிழ் இலக்கியங்களிலும், செய்யுள் வடிப்பதிலும் சமயப் பேரறிஞர்களும் பாராட்டி போற்றும் அளவுக்கு தன்னிகரற்று விளங்கினார். சேக்கிழார் புதுவழியை வகுத்துக் கொண்டு, தொண்டு என்ற பண்பைக் காப்பியப் பொருளாக்கித் தொண்டர்கள், பக்தர்கள் என்பவர்கள் தூய பக்தி மனப்பான்மையுடன் வாழ்க்கை நடத்தும் போது எப்படி எல்லாம் செயல்படுவார்கள் என்பதை விளக்கினார். மிக உயர்ந்த இந்தக் கருத்து எல்லாம் மக்களிடமும் சென்று பரவவேண்டும் என்று கருதினார் சேக்கிழார். எனவே அவருடைய பெரிய புராணம் அனைத்து உலகத்தையும் தழுவும் பண்பு கொண்டு அமைந்து விட்டது.

"கற்பனை கடந்த சோதி, திருசிற்றம் போற்றி போற்றி" என்று தெய்வ மணம் கமழ பாடிய சேக்கிழாரை தொடர்ந்து பார்க்கலாம்.
இனி சில பெரிய புராண பாடல்களை பார்ப்போம்:
பன்னிரெண்டாம் திருமுறையில் :-

"வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை
விளங்கப் பூதபரம்பரை பொலியப் புனித வாய்
மலர்ந்தழுத சீதவள வயற்புலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருதொண்டு பரவுவாம்"
- என்கிறார்.

வேத நெறிகள் தழைக்கவும், சைவ சித்தாந்த சமயம் விளங்கவும், பாண்டியன் வெப்ப நோயை நீக்கி, சமணரை வென்று சைவ சமயத் தொண்டினை பரவச் செய்ய அவதாரம் புரிந்தார் என்பதையும் சித்தரிக்கிறார்.

திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் இறைவனை நேரே கண்டு பாடியதுடன் மக்கள் துயர் துடைக்கும் பணியில் முழு மனதாக ஈடுபட்டனர் என்பதையும் சேக்கிழார் விளக்குகிறார். நாவரசரும், ஞான சம்பந்தரும் திருவீழிமிழிலைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில்,
"மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி,
விண்ணவர்ககும் சிறப்பியல் வரும் பூசை யாற்றா
மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங்
கவலை வருமோ?"
-என்று கருதினார்களாம். இவ்வாறு நினைத்த அவர்கள் மக்களைப் பார்த்து ''நீங்கள் இறைவனை வழிபடுங்கள் விரைவில் வளம் பெருகும்'' என்று கூறாது, பஞ்சத்தால் மக்கள் படும் துயரத்தைக் கண்டு மனம் வருந்தி அன்றிரவு துயில்கையில், கனவில் இறைவன்,

"உலகியல் நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசி நோய் உமையடை யாதெனினும் உம்பால்
நிலவு சிவநெறி நித்தம் ஒரோர் காடு நீடும்
லகுமணி பீடத்துக் குணக்கும் மேற்கும் யாம்
அளித்தோம் உமக்கு"
-என்று கூறி அவ்வாறே காசும் அளித்தான்.

இறைவன் தந்த பொற்காசை மாற்றி பசித்தோர் அனைவரும் வந்து உண்ணலாம் என்று அறிவித்தனர்.
'' நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
உண்பதற்கு வருக என்று
தீதில் பறை நிகழ்வித்து.....''
அழைத்தார்கள்.

அவர்கள் கூறிய சொற்கள் ஊன்றி கவனிக்க வேண்டியவைகள். ' இறைவனால் அருள்செய்யப் பெற்ற உயிர்கள்' என்று பொருள். இறைவனால் படைக்கப் பெற்ற எல்லா உயிர்களுக்கும் வேறுபாடு காட்டாமல் அவன் அருள் செய்கிறான். எனவே அனைவருக்கும் வேறுபாடின்றி உணவு தந்தார்கள் என்ற நுண்ணிய கருத்தை அழகாக நுணுக்கமாவும் தருகிறார் சேக்கிழார்.

வனவேடரான கண்ணப்பரது செருப்படியை இறைவன் ஏற்றுக் கருணை புரிந்தது போல, சாக்கிய நாயனார் ஒப்பற்ற அன்பினால் கல்லெறிந்து வழி பட்டதையும் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை சேக்கிழார் தமது பாடல் மூலம்,
'கல்லாலே எறிந்தததும் அன்பானபடி காணில்
வில்வேடர் செருப்படியும் திருமுடியின்மே வியுறால்,
நல்லார் மற்றவர் செய்கை அன்பாலே நயந்ததனை
அல்லாதார் கல்லென்பார் அரனார்க் கல்பவராமல் ..."
-என்று பாடுகிறார்.

திருத்தொண்டர் தொகை எனும் வரலாற்று நூலைத் தரவும், மாதவம் செய்து தென் திசை வாழவும்,
சைவம் தழைக்கவும் உலகுக்கு சுந்தரரை இறைவன் அனுப்பினார் என்பதை,

' மாதவஞ் செய்து தென் திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டர் தொகை தரப்போதுவராவர் "

-என்று சுந்திரரின் அவதாரத்தினை குறிக்கிறார்.

"மானிடராகப் பிறந்தால் இறைவனிடம் அன்பு கொண்டு என்றும் மறவாமல் இருக்க வேண்டும்" என்பதை சேக்கிழார்,

"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகிறார் பிறவாமை வேண்டும்,
மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும் மறவாமை வேண்டும்,
இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி !
நீடும் போதுன் அடியின் கீழ் இருக்க " [திருநாட்டுச் சிறப்பு]
என்கிறார்.

- கவிதையை அழகு படுத்துவது உவமையணி என்றாலும் கூட , அந்த உவமையணியைப் போல் கவிஞனின் உள்ளத்தினைப் புலப்படுத்துவது வேறொன்றுமில்லை. கவிஞன் தான் விளக்கப் புகுந்த பொருளை தான் அறிந்தும் தனக்கு மிகப் பிடித்த அல்லது பழக்கமான பொருளைக் கொண்டு விளக்கிக் காட்ட முயல்வான். அப்போது அவனை அறியாமல் அவன் உள்ளத்தோடு இணைந்து விட்டவை உவமை வாயிலாக வெளிப்படும்.

சேக்கிழாரும் அங்கும் இங்குமாக அவர் பயன்படுத்திய உவமைகளும், அவர் உள்ளப் பாங்கைக் காட்டுவதாக அமைகிறது. நெற்பயிர்கள் தம்மை ஒப்பாரும் மிக்காரும் இன்றிச் கருவுற்றி, முதிர்ந்து பசலைக் கொண்டு, சுருள் விரிந்து இலர்கின்றன். சேக்கிழார் மனதில் நெற்கதிர்களைப் போலச் சிந்தை மலரும் சிவனடியார்களின் நினைவு மலர்கிறது.

"சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதம் வெண்மை உண்மைக் கருவினும் வளத்த வாகிச்
சூல்முபிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கண்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்கலெல்லாம் " [திருநாட்டுச் சிறப்பு.]

அடுத்து முற்றிய அந்த நெற்கதிர்களைப் பார்க்கிறார். அவை தலை தாழ்த்தி வணங்குவன போல் காணப்படுகின்றன. அவை தன் முனைப்பற்றுப் பணிவோடு நிலை கண்டவுடன் அவர் உள்ளத்தே ஒரு கற்பனை விரிகிறது.

ஞான சம்பந்தரும் அப்பரும்சந்திக்கும் போது எப்படி இருப்பார்கள், சேரமான் பெருமானும் சுந்திர மூர்த்தி நாயனாரும் சந்தித்த போது எப்படி இருந்திருப்பார்கள் என்ற கற்பனை அது.

தன்முனைப்பற்று இறையன்பிலேயே தினைத்திருந்த அவர்களும் இப்படித்தான் வணங்கி இருப்பார்கள் என்ற தெளிவு ஏற்படுகிறது. அந்தத் தெளிவில், முதிர்ந்த கதிர்களின் வணக்கத்துத் தாம் சிந்தையில் கண்ட காட்சியையே உவமையாக்கி விடுகிறார்.
"பத்தியின் பால ராசிப் பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்த நீள்பத்தியின் பால் முதிர் தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் "    [திருநாட்டு சிறப்பு]
மற்றொரு சிந்தனை. காவிரியில் நீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. கரையோரத்தில் இருந்த மரங்கள் சொரிந்த மணமுள்ள மலர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு செல்கிறது. இவ்வாறு செல்கின்ற காட்சி, கரை ஓரத்தில் இருக்கும் சிவன் கோயில்களில் காவேரியானது மலரும், நீரும் கொண்டு அஞ்சலி செய்வது போல இருக்கிறது. இச்செய்கையால், மலரும் நீரும் கொண்டு சிவபெருமானை வழிபடும் அன்பருக்கு காவேரியாறு நிகர் என்று கூறுகிறார் சேக்கிழார்.
"வம்பு வாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை யெண்ணிலி சிவாலயத்
தெம்பி ரானை யிறைஞ்சலின் ஈரம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஓக்குமால். "

கவிதை தோன்றிய நாள் முதற் கொண்டு, கவிஞர்களின் கற்பனைக்கு வளம் தந்து இன்பம் தருவன நிலவும் பெண்ணும். இந்த இரண்டையும் பாடாத கவிஞர் இருப்பாரா என்பது ஐயத்திற்குரியது. இல்லை என்றே கூறலாம். அந்த இரண்டைப் பற்றியும் பாடும் போது சேக்கிழார் தனித்து நிற்கிறார். அத்தோடு மட்டுமின்றி அவற்றைப் பாடும் போது சேக்கிழார் தம் உள்ளத்தில் கனிந்த இறையன்பைக் காட்டுகிறார்.
வானிலே நிலா உலா வந்து கொண்டிள்ளது. அதனுடைய தூய்மையும் இன்பமும் குளிர்ச்சியும் மண்ணுயிர்களை எல்லாம் ஓம்புகின்றன. நிலாவின் இயல்புகள் சேக்கிழாருக்குத் திருநீற்றின் நினைவைக் கொண்டு வருகிறது. தூய்மை, இன்பம், தன்மை ஆகிய மூன்றும் திருநீற்றிற்கும் உரிய இயல்புகள் தாமே ?
அந்த சிறப்பான பாடல் :

" தோற்றும் மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய்
இற்றி அண்டமெலாம் பரந்தண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா. "  [திருத்தாட்தொண்ட புராணம்]
காதல் சுவையினையும் இறைவன் திருவருள் நயத்துடன் உரைக்கிறார். காதலியைக் கண்ட அளவிலே, காதலன் உள்ளத்தில் எழும் இன்ப உணர்ச்சிகளும் அவள் அழகு தோற்றமும், கவிஞர்களுக்கு இடையறாத கற்பனை ஊற்றாய் விளங்குகிறது பரவையாரை முதன் முதலில் பார்த்தவுடன் சுந்தரர் உள்ளத்திலும் அத்தகைய இன்ப அலைகள் எழுந்து ஆர்ப்பரிக்கின்றன. பரவையாரின் எழில் சுந்தரரை மயக்குகிறது. இப்படியும் ஒரு பெண்ணெழில் உண்டா என வியக்கிறார்.
"கற்பக் தருவின் பூங்கொம்போ ?
காதல் கடவுளாகிய காமனுடைய பெரு வாழ்வே இவ்வெழில்
வடிவமாக வந்து நிற்கின்றதோ ?
புயல், வில், குவளை, பவளமலர், நிலா முதலிய அனைத்தும்
ஒரு சேர பூத்த மணமிக்க கொடியோ ?
-என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன. அந்த கற்பனை எல்லா கவிஞர்களுக்கும் ஏற்படும் நிலையில்தான் சேக்கிழாரும் நிற்கிறார். ஆனாலும், வாதம் செவ்விய உள்ளத்தையும் நுண்மையும் காணலாம். அது "சிவனுடைய அருளோ? " என்பதுதான் அக்கேள்வி.
சுந்தரின் மனதில் ஏற்படும் இந்த வியப்பை எல்லாம் இப்படி கவிதையாக வடிக்கிறார்.

" கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ யாதொவென்று அதிசயித்தார் " [தடுத்தாட் கொண்ட புராணம்]

இவ்வாறு காண்கிற காட்சிகளில் மட்டுமன்றி, நடக்கின்ற செயல்களிலும் இறைவனின் திருவருளையே காணும் பக்குவ உள்ளம் சேக்கிழாருடையது என்பதற்கு பெரிய புராணம் ஒரு சான்று.

நகைச்சுவை வைத்துப் பாடுவது எளிதாகும்.ஆனால் அதனுள்ளும் ஆழமான கருத்தமையப் பாடுவது கடினம். ஒற்றியூரில் புற்றிடங் கொண்டாரைப் பணிந்து சங்கிலியை மணம் முடித்து தருமாறு சுந்தரர் வேண்டுகிறார் என்று சேக்கிழார் நகைச்சுவை பொருந்த ஒரு பாடலை அமைத்துள்ளார்.

''மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீர் முடிவின் கண்
கங்கை ஒருபால் கரந்தருளும் காதலுடையீர்; அடியேனுக்கு
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடை அவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும்."
-என்ற இந்தப் பாடல் முதல் இரண்டடிகளில் நகைச்சுவை நிரம்பி மிளிர்கின்றது.
இறைவன் உதவி கொண்டு திருவாரூரில் பரவை மணந்து இன்பமாக வாழும் சுந்தரர் மறுபடியும் ஒரு பெண்ணைத் தர வேண்டுமென்று கேட்டால் சற்று அதிகமானதுதான். அவ்வாறு கேட்க முடியாமல் செய்ய ஒரே வழி "நான் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும், நீயே இரண்டாவது மனைவி ஒருத்தியை மறைவாய் தலையில் வைத்துள்ளாயே!" என்று கூறுவதுதான். வரப் போகும் வினாவை எதிர்பார்த்து அதற்கும் சேர்த்து விடை கூறுவது போல "பாகத்தில் ஒருத்தியை வைத்து போதாதென்று தலையிலும் ஒருத்தியை மறைத்து வைத்துள்ளவரே!' என்றே விளிப்பது கருத்துடை அடைமொழி ஆகும். அதை விடவும் அதில் ஒரு சிறப்பு உள்ளது. "கரந்தருளும் காதல் உடையீர்!" என்று கூறும் பொழுதே "நான் உம்மைப் போல் மறைவாக வைத்து வாழ விரும்பவில்லை. ஊரறிய மணஞ் செய்து கொள்ளவே விரும்புகிறேன்" என்ற கருத்தும் தொக்கி நிற்கக் காண்கிறோம்.

அழுகை சுவையும் ஒரு பாடலில் காண்கிறோம். இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற காரணங்களால் இச்சுவை பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
எளியார் முறையிட கூடிய ஒரே இடம் இறைவன். திரு மருகல் பெண்ணின் அழுகை இது. தனிப்பட்ட ஒரு பெண் தன் காதலனுடன் 'உடன் போக்கு மேவ, இடைவழியில் அவன் அரவு தீண்டி இறந்துபட, புலம்பி அழுகின்றாள். இறப்பு என்பது நீக்க முடியாதது என்பதை அப் பேதைப் பெண் நன்கறிவாள். ஆனாலும் திருமருகலில் உள்ள இறைவனிடம் தன் துயரை வெளியிடுகிறாள். விண்ணப்பம் செய்யும் முறையில் அவள் அழுகை வெளிப்படுகிறது.
"அடியாராம் உமையவர் தம் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே! செங்கண்
நெடியோனும் நான்முகனும் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலா! வெந்து
பொடியான காமன் உயிர் ரதிவேண்டாப்
புரிந்தளித்த புண்ணியனே! பொங்கர்வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின் மருகல் பெருமானே! காவாய் என்றும்..!

வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேல் சீறி
வருங்காலன் பெருங்கால் வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரியகோலம்
சிதைந்துருள உதைத்தருளும் செய்ய தாளா!
இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும்
யான் டுக்கண் குழிநின்றும் ஏறுமாறும்
அந்திமதிக் குழவி வளர் செய்யவேணி
அணிமருகல் பெருமானே! அருளாய்"

-என்ற அடிகளில் தன் வாழ்வு பாழாகி விட்டதற்கு அப்பெண் மனம் உருகிக் கதறுகின்றாள். ஆனால் தன்னலத்தின் அடிப்படையில் தோன்றிய அழுகையாயினும் சேக்கிழார் கையில் அந்த அழுகை புதியதோர் வடிவு எடுக்கின்றது.
காணும் காட்சிகளிலும் நடக்கும் செயல்களிலும் இறைவனின் பேரருளைக் கண்ட சேக்கிழார், தீயதை நெஞ்சினால் நினைக்கவும் பெறாத சான்றோர். அடியவர்களின் கதைகளைப் பாடும் நூலில் அமங்கலமாகச் சொற்களை போடமல் மங்கலச் சொற்களாலேயே தாம் சொல்ல வந்ததைச் சேக்கிழார், முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சித்துக் கொல்ல எண்ணித் திருக்கோவலூர் சேர்ந்ததை,
"அற்றத்தில் வெல்வானாச் செப்பரு நிலைமை
எண்ணித் திருகோவலூரிற் சேர்வான் "
-என்றே சேக்கிழார் குறிப்பிடுவதுடன் அவன் தான் எண்ணியதை முடித்தவுடன் தான் முன் நினைந்த அப்பரிசே என்றே குறிப்பிடுகிறார். அத்துடன் பரத்தையர் குலத்தைக் கூடப் பண்புடன் பதியிலார் குலம்"என்றே தம் புராணத்தில் சொல்லியுள்ளார்.
சேக்கிழார் சிவபெருமானிடம் இடையறாத அன்பு பூண்டவர். அதே போல் சிவத்தொண்டர்களிடம் வற்றாத அன்பு பொங்கும் நெஞ்சினர். அன்பே உருவாக, அருளே உயிராய் இயங்கும் சான்றோர். நடக்கின்ற செயல்களில் எல்லாம் இவ்வாறு இறைவன் திருவருளையே காணும் சேக்கிழார், செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அவனை நினைந்து பணித்திருக்கிறார். அவரின் ஒரு பாடல் இதனைக் காட்டுகிறது.
கம்பர் காப்பிய நாயகன் ஈடு இணையற்ற மன்னன். ஒருத்தியுடன் வாழ்வதே இன்பம் என்று நினைப்பவன். தந்தை மாறுபட்ட வாழ்வை நடத்தியவன். எனவே அவனுடைய நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெறுகிறது. புலனடக்கம், நல்லொழுக்கம் என்பவற்றின் உறைவிடமாய், அறத்தின் மூர்த்தியாய், ஒருவன் தோன்றப் போகும் நாட்டைக் கூற வருகின்றான் கவிஞன். முதற்பாடல் அவனுடைய காப்பிய தலைவன் பண்பாட்டைக் கூறுவது போல அமைந்துள்ளதைக் காணலாம்.

"ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காக அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை நாட்டணி கூறுவாம்"
-என்று தொடங்கும் கம்பனின் பாடலில் தன் காப்பியத்தின் உள்ளீடு நுண்மையாக கூறுகிறது.

இதே போன்று சேக்கிழாரும் தம் காப்பியத்தின் முதற் பாடலில் கயிலை மலையை வருணிக்க புகுகின்றார்.

"பொன்னின் வெண்திரு நீறுபிணைத்தெனத்
தன்னை யார்க்கும் அறிவரி யான் என்றும்
மன்னி வாழ் கயிலைத்திரு மாமலை"
-என்ற இப்பாடலில் தன்னை யாரும் அறிவரியானுடைய சிறப்புதனை கூறும் காப்பியம் என்பதை நுண்மையாக அறியுமாறு செய்கின்றார்.
" நின்றாலும் ருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் மைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார் "
-இவை அனைத்தும் ஒரு சேர பார்க்கும் மகா வித்துவான் மீனாட்சி சுந்திரம் பிள்ளை,

" பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ "
' தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம் '
' சிவ மணக்குஞ் செய்யுளெலாம்'
- என்கிறார்

''அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிய விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே ''
- என்று பாடிய தாயுமானவரின் பாடலுக்கு ஏற்ப தனது வாழ்நாள் அனைத்தும், தமிழும் வளர, உலகில் சிவநெறி தழைத்தோங்க, சைவ சமயத்தில் பிடிப்பு உணர்வு உண்டாக்கி, மக்களை பக்தி சுவையில் ஈடுபடுத்திய பெருமை சேக்கிழாரை சாரும். தமிழர்களின் தனிப்பெரும் பேரிலக்கியமும் ஞான நூலுமாகிய பெரிய புராணம் வாய்மை நிறைந்த நூலாகும்.

மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?..


குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.

பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.
சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.
அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.
உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.
துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.
அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.
உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.
மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.
இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

கோமாதாவின் பெருமை தெரியுமா?...



இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
  • பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால் 
  • கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
  • சிரம் - சிவபெருமான்
  • நெற்றி நடுவில் - சிவசக்தி
  • மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
  • மூக்கினுள் - வித்தியாதரர்
  • இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
  • இரு கண்கள் - சந்திரர், சூரியர்
  • பற்கள் - வாயு தேவர்
  • ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
  • ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
  • மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
  • உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
  • கழுத்தில் - இந்திரன்
  • முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
  • மார்பில் - சாத்திய தேவர்கள்
  • நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
  • முழந்தாள்களில் - மருத்துவர்
  • குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
  • குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
  • குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
  • முதுகில் - உருத்திரர்
  • சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
  • அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
  • யோனியில் - ஏழு மாதர்கள்
  • குதத்தில் - இலக்குமி தேவி
  • வாயில் - சர்ப்பரசர்கள்
  • வாலின் முடியில் - ஆத்திகன்
  • மூத்திரத்தில் - ஆகாய கங்கை
  • சாணத்தில் - யமுனை நதி
  • ரோமங்களில் - மகாமுனிவர்கள்
  • வயிற்றில் - பூமாதேவி
  • மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
  • சடாத்களியில் - காருக பத்தியம்
  • இதயத்தில் - ஆசுவனீயம்
  • முகத்தில் - தட்சிணாக்கினி
  • எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
  • எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

மலேசிய பத்துமலைக் குகை முருகன் கோயில்...



மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தலவரலாறு

மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.
இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

கோயில் அமைப்பு

இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
மிகப் பெரிய முருகன் சிலை

தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

சிறப்பு விழாக்கள்

  • முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 
  • இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு,  தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது. ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
சிறப்புக்கள்
  • மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.
பயண வசதிகள்

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. 

கீதை காட்டும் பாதை...



பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர் -கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும்.

பகவத்கீதையின் சிறப்பு

"அமிர்த சாத்திரம்" - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத்கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.

இவ்வுலகில் அனைவரும் மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். அல்லது அச்சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மன உளைச்சல் பல்வேறு விதமான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. மனிதன் இம்மன உளைச்சலால் பல துன்பங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆளாகின்றான். இத்தகைய துன்பங்களில் இருந்து அவன் விடுபட்டு மன அமைதியுடன் வாழ வேண்டும். இத்தகைய மன அமைதியுடன் வாழும் வாழ்க்கையைப் பற்றியே பகவத்கீதை எடுத்துரைக்கின்றது.
உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. உளத்திற்கு ஊறு நேரிட்டால் அது உடலைப் பாதிக்கின்றது. உளம் அமைதி அடைந்தால் உடல் நலம் பெறுகின்றது. அத்தகைய உள அமைதியை நல்கும் உன்னத நூலாகப் பகவத்கீதை இருக்கின்றது. போர்க்களம் என்பது இவ்வுலக வாழ்க்கை. அதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகள். போராட்டம் நிறைந்த வாழ்வில் மனம் தடுமாற்றம் அடையாது வாழ்வதே உண்மையான வாழ்க்கை; அதுவே யோக வாழ்வு. இத்தகைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்று கூறும் வாழ்வியல் சாஸ்திரமாக பகவத்கீதை அமைந்திலங்குகிறது.

பகவத் கீதை தரும் யோகம் பற்றிய விளக்கம்
பகவத்கீதை மனம் இறைவனுடன் இணையும் வழியை எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் உயிரானது இணைகின்ற நெறிகளை யோகமாகக் கூறுகிறது. யோகமாவது சமத்துவம் ஆகும். இதனை, “மத்வம் யோக உச்யதே என்று பகவத்கீதை மொழிகிறது. அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி என்பது இதன் நுவல் பொருளாகும்.

நீ ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய். “யோகத குரு கர்மாணி’’ என்று பகவத்கீதையில் கடவுள் கூறுகிறார். “யோகத்தில் நின்று தொழில்களைச் செய்” என்பது இதன் விளக்கமாகும்.
யோகநெறியில் வாழ்பவன் யோகி ஆவான். யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.

பகவத் கீதை தர்ம சாத்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோட்ச சாஸ்திரம். மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோட்ச மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் “தொழில் செய்’’, “தொழில் செய்’’ என்று போதிக்கின்றார். இதனால், அதனை வெறுமனே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு.சம்சயாத்மா விநச்யதி”, “ஐயமுற்றோன் அழிவான்” என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.
ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தைப் பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையும் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத சயரோகத்தில் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையும் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் சயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. சயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாக்கிக் கொண்டு, சயரோகி என்று தனக்கொரு பட்டம்சூட்டிக்கொண்டு வருந்திு மடிவது போல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.
ஞானயோகம்
ஞானக் நிர்வ கர்மாணி பமத் குருதே” - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின். ஆனால், அதிலிருந்து இது ஞான சாத்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது. ‘‘முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, “தமாத் யுத்ய வ பாரத- “ஆதலால், பாரதா, போர் செய், என்ற பல்லவி வந்து கொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் மறுக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதனை, இங்கு மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.
துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன்- ஜீவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இதுவே உண்மை. இங்ஙனம் வாழ்க்கையை நலமுடன் அனைவரும் மேற்கொள்ளக் குறியீடுகளைக் கொண்டு இறைவன் கிருஷ்ணன் விளக்கிச் செல்கிறார்.
கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்;
நீ வாயு; நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )
கண்ணன் சொல்லுகிறான்;
 “மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)
நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’’ - (கீதை 10- ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும், கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள். கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாத்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ள இயலும்.
இயற்கை விதிப்படி வாழ்வதே யோகம்
கடவுளை வழிபாடு செய்வது எங்ஙனமென்பதை, கிருஷ்ணன் சொல்லுகிறார்
நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)
எந்த உயிரகளுக்கும் துன்பம் செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த உயிரையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத்தகார். மாமிச உணவை உண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார். “அரிம் பரமோ தர்ம’’ - “கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது. ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் “common sense என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும். சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் மனிதர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், “நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.
நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கை இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது. நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் .ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துக்கொண்டுமிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.
கர்ம யோகம்
கீதையிலே பகவான் சொல்லுகிறான் - “அர்ச்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்யவேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்” ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் - “நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்’’ என்று கூறுகிறார். செயல் செய்வதே யோகமாகும். அது கர்ம யோகமாகும். கர்மயோகம் செய்பவன் கர்ம யோகியாவான். கடவுளும் கர்ம யோகியாவர்.
கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.
எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய உயிர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகமாக நடமாக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது.
பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே பகவத்கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனித சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.
பாவம் புண்ணியம்
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.
இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை ஸ்ரீ கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார். “அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்ற தென்னே பராபரமே?” என்று தாயுமானவர் பாடியுள்ளார்.
இவ்வுலகத்தில் மனிதர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று கருதலாம். இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து உயிர் வாழ வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. நனவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.
உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லாப் பெரியவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.
கீதை கூறக்கூடிய யோகம் மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் யோகமாகும். இயற்கை விதியை மீறாது தனது கடமைகளைச் செய்து, அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்தி வாழ்பவன் யோகியாவான். அவன் கர்மங்களைச் செய்கின்ற போது கர்மாயோகி என்றழைக்கப்படுகின்றான். கடமையாகிய யோகத்தைச் செய்து கீதை காட்டிய வழியில் வாழ்ந்தால் யோகநிலையில் உயர்நிலையை மனிதன் அடைவது திண்ணம். கடமையைச் செய்வோம்! யோக நெறி வாழ்வோம்.