செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




திங்கள், 20 ஜூன், 2011

"நாடகக்கலைப் பிதாமகர்" பம்மல் சம்பந்த முதலியார்...

தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை.
முத்தமிழில் நாடகம் இயலையும்,
இசையையும் தன்னகத்தே கொண்டது.
நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை,
கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும்
ஆற்றல்.
நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம்.
மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத்
தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை
சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும்
நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி
எடுத்து வைத்தபிறகே நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி
பிறந்தார்.
தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு
அம்மாள்.
"நாடக உலகப் பிதாமகர்" என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத்
தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப்
பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம்
பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.
தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை
என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924ஆம் ஆண்டு சிறு வழக்குகளை
விசாரிக்கும் நீதிபதியானார்.
வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில்
பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப்
பார்த்தது கிடையாது. 1891ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான
நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த
"சுகுண விலாஸ சபை" அன்றுதான் நிறுவப்பட்டது.
பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து
சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு
மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள்
விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.
அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு
என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு,
பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக
இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை".
அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா" என்ற நாடகத்தைத் தமிழாக்கம்
செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற
அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தார்.
அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை
சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில்
நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை
என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள்
நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக
வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள்,
புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.
மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை,
அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப்
பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக்
கவிதை" எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர்
என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.
நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம்
செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின்
கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற
பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை
ஏற்றுவார்.
அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி".
அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக
இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா".
மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர
முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார்.
மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார்.
இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.
"என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய
காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம்.
நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.
மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார்.
கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக
நினைவுகள்" வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு
இருக்கிறது.
"என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது.
அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில்
தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி" என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில்
என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்ட்டு" செய்ததனால்,
அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள்
தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக
மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).
மனோகரா நாடகம் சுகுண விலாஸ
சபையாரால் 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில்
நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப்
பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன.
இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.
சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94.
அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி.
பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை
குறைவு.
நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள்.
நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக்
கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர்
சம்பந்தனார்தான்.
"நாடகத் தந்தை" என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப்
பிதாமகர்" என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை
வளர்த்தார். 1959ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்" விருதை பாரத அரசு வழங்கிச்
சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு இராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).
தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க
சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91வது வயதில், 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம்
தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும்
ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும்
அழியாது.
                                            
                                                                              வாழ்க வளமுடன்
                                                                               க.செந்தில்குமார்

தேசியக்கவி முகவை முருகனார்...

முகவைக் கண்ண முருகனார் (1890 - 1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர்
அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910 - 1924 காலகட்டத்தில் ஒரு தேசபக்த கவிஞராகத்
தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சமகாலத்தியவரான மகாகவி சுப்பிரமணிய
பாரதியாருக்கு ணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர் தேசியக்கவி முருகனார்.
 
 
                                                                                                         
பாரதியாரின் தேசிய இயக்கப் பாடல்களின் முதல் தொகுப்பு "ஸ்வதேச கீதங்கள்"
என்ற தலைப்பில் 1908இல் வெளியாயிற்று. கவிமுருகனாரின்  "ஸ்வதந்திர கீதங்கள்" என்ற
பாடல் தொகுப்பு, 1918இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு
முன்னதாகவே "தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்" என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்
முருகனார்.
"மகாத்மா காந்தி பஞ்சகம்" என்ற தலைப்பில் தாம் எழுதிய "வாழ்க நீ எம்மான்..."
என்று தொடங்கும் பாடலை, 1918இல் சென்னைக் கடற்கரையில் திலகர் கட்டத்தில், ஒரு
பொதுக்கூட்டத்தில் பாரதியார் தமது கணீர்க் குரலில் உரக்க ஒலித்து, மக்களைச்
சிலிர்க்க வைத்தாரல்லவா? அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே காந்திஜியைப் போற்றி
கவிமுருகனார் இயற்றிய,
"தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே
 ஞானம்
பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்
 சாந்தி யுபதேசித்த சன்மார்க்க
சற்குருவாம்
 காந்தி நன்னெறி நடக்குங்கால்''.
என்ற பாடல் உடனடியாய்
தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. தென்னிந்தியர் அனைவரும் இந்தி மொழி கற்க வேண்டும்
என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனாராகத்தான் இருக்க வேண்டும். இது குறித்து,
அவரது "ஸ்வதந்திர கீதங்க"ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
பிற்காலத்தில் தமிழ் இலக்கியத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் சங்கத்
தமிழ் நடையில் கவிதை மழை பொழிந்தவர். ஐந்து வயது வரையில் ஊமைபோல் வாய் திறவாமல்
இருந்த இவர், பின்பு தமிழ்மொழியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக அதில் மிகுந்த
தேர்ச்சி பெற்றார் என்பர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் (இராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர்
எளிய அந்தணர் குடும்பத்தில், 1890ஆம் ஆகஸ்டு மாதம், கிருஷ்ணய்யர் - சுப்புலட்சுமி
தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த தேதி அறியக் கிடைக்கவில்லை. இவரது
இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார்.
இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.
கல்லூரி நாள்களிலேயே அவருக்கிருந்த அபரிமித தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது
பெயரை "முருகனார்" என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால்,
"முகவைக் கண்ண முருகனார்" என்ற பெயரில் பிரபலமானார்.
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் இராமநாதபுரம் அரச
குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க
நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
பிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயார் சகிதம் சென்னை நகருக்கு இடம் மாறி,
நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப்
பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார்.
அந்தக் காலகட்டத்திலேதான் ஸ்ரீரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய
"நான் யார்?" என்ற சிறு நூலை 1922இல் படிக்க நேர்ந்தது. படித்ததும் பரவசமானார். அதே
ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று இரமண மகரிஷியை (1879 - 1950) தரிசித்து, சமைந்து
நின்றார். தேசபக்திக் கனல் மங்கி சாம்பல் பூத்தது. ஆன்மிக எழுச்சி கொழுந்துவிட்டு
எரியத்தொடங்கியது.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், இராவ்பகதூர், வ.சு.செங்கல்வராயப் பிள்ளை,
எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவர்
இரா.இராகவையங்கார் போன்ற மகாமேதைகள் எல்லாம் போற்றிப் பேசியும், பாடியும் புகழும்
அளவுக்கு ஓர் ஒப்புயர்வற்ற தமிழ் அறிவாற்றலைப் பெற்றிருந்தார் முருகனார்.
இராவ்சாஹிப், மு.இராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக்
(Lexicon)​ குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த நூற்றாண்டின் சங்கப்
புலவர் என்றே முருகனார் இவர்களால் போற்றப்பட்டார்.
1926இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப்
பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை
சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, தன் வயமிழந்தார். புறவாழ்வை அறவே துறந்தார்.
கடைசிவரை இரமண மகரிஷியின் பரம பக்தராய், ஒரு துறவியாய் இரமணரின் நிழலாகவே வளைய
வந்தார் முருகனார். இரமணரைச் சரணடைந்து, தேச பக்தியைத் துறந்து, இரமண பத்தியில்
ஆன்ம அனுபூதி பெற விழைந்ததைப் பற்றி சற்றே சிலேடை கலந்த பாடலொன்றில் பதிவு
செய்துள்ளார்.
திருவண்ணாமலையில், 1926ஆம் ஆண்டு முதற்கொண்டு ஸ்ரீரமண தரிசனத்தைவிட்டு
முருகனார் அகலவேயில்லை. உண்டிப் பிட்சை (உஞ்சவிருத்தி) எடுக்க ஆசிரமத்தை விட்டு
வெளியே சென்ற நேரம் தவிர, நாள் முழுவதும் ஆசிரமத்து தியான மண்டபத்திலேயே சமைந்து
கிடந்தார்.
பல்வேறு பக்தர்கள் மற்றும் வருவோர்-போவோர் மகரிஷி இரமணரிடம் எழுப்பிய
ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள் அவற்றுக்கு மகரிஷி அளித்த பதில்கள்,
தெள்ளிய அறிவுரைகள் யாவற்றையும் முருகனார் மெளன சாட்சியாகச் செவிமடுத்தார். மகரிஷி
பெரும்பாலும் தமிழிலேயே சுருக்கமாக விடையளிப்பது வழக்கம். இவ்வாறு இரமணர் தெள்ளிய
உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக
கிரகித்துக்கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச்
செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி இரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும்
அனுமதியும் பெற்றுவந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி,
பாடலைப் புனரமைத்தார்.
இவ்வாறு கோத்தமைத்த நூலே "குருவாசகக் கோவை" என்பது. மொத்தம் 1,282 நாலடி
வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை,
குரு இரமணரின் ஒப்புதல் பெற்றது. ஆன்மிகர்களுக்கும், தமிழைச் சுவைக்கக்
கூடியவர்களுக்கும் என்றென்றும் இலக்கிய மணம் வீசும் பாமாலையாக அமைந்துள்ளது. ஆனால்,
இன்றளவில் பரவலாக அறியப்படவில்லை என்பது வருந்தத்திற்குரியது. இப்பாடல்கள்
அனைத்தையும் இரமண சித்தாந்தச் சிற்பியும், காந்திய மாமேதையுமாகத் திகழ்ந்த
பேராசிரியர் கே.சுவாமிநாதன் (1896 - 1994), கவிதை, பொருள் நயம் சிறிதும் குன்றா
வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார்.
1928இல் முருகனாரின்
முயற்சியால், இரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத்
தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது" என்ற தலைப்புடன் ஓர் அரும்பெரும்
நூலாயிற்று. சாத்திர நூல்களைத் தவிர,
ஸ்ரீரமண சந்நிதி முறை
ஸ்ரீரமண தேவமாலை
ஸ்ரீரமண
சரணப்பல்லாண்டு
ஸ்ரீரமணானுபூதி.
முதலிய அரிய தோத்திர நூல்களையும்
இயற்றியுள்ளார். மேலும், இரமண - அனுபூதி பற்றி முருகனார் தாமாகப் புனைந்துள்ள
நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலம் மனங்கடந்து வியாபிக்கும் தூய உணர்வுப்
பிரபஞ்சத்தில் சஞ்சரித்துத் தாம் இலயித்த பரமானந்தப் பிரக்ஞையை வெவ்வேறு கோணங்களில்
விவரித்துள்ளார்.
முகவை முருகனார் இயற்றிய இந்த "ஸ்ரீரமண சந்நிதி முறை" நூலை "திருவாசகம்
நிகரே" என்று பகவான் ஸ்ரீரமணர் புகழ்ந்துள்ளார். "என்றைக்கு குருவாசகக் கோவையும்
ஸ்ரீரமண சந்நிதி முறையும் முருகனாரிடமிருந்து வெளிவந்தனவோ, அன்றே முருகனார் தலையாய
அடியவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்",என்றும் கூறியிருக்கிறார்.
பதினான்காயிரம் (14,000) பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள்,"இரமண ஞான
போதம்" என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டு சாதனை கண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரமண மகரிஷி 1950இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டு காலம்
முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை சரமாரியாகப் புனைந்து வந்தார். சுமார்
30,000க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார்.
கடைசி ஆண்டுகளில் இரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து, ஆன்மிக நாட்டத்துடன்
அணுகுவோர்க்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார்.
இரமண மகரிஷியிடம் தாம் தம் கவிதைகளில் வெளிப்படுத்திய பக்திக்குப் பன்மடங்கு
மேலாகத் தம் சொந்த வாழ்வில் அப்பரபக்தியை வெளிப்படுத்தி, வாழ்ந்து காண்பித்த
முருகனார், 1973ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28ஆம் தேதி பகவான் திருவடிகளில் ஒன்று கலந்தார்.
இவரது சமாதி இரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
இராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக
"ஸ்ரீமுருகனார் மந்திரம்" என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, இரமண பக்தர்கள் வணங்கும்
ஒரு புனிதத் தலமாக விளங்கி வருகிறது. தேசியக் கவியாகவும், வரகவியாகவும் திகழ்ந்த
முருகனாரது தமிழ்த் தொண்டும் புகழும் ஸ்ரீரமணர் புகழ் பாடும் இடமெல்லாம்
நிலைத்திருக்கும் என்பது உறுதி.
 
                                                         வாழ்க வளமுடன் 
                                                         க .செந்தில்குமார்

"அருள்மொழி அரசு" திருமுருக கிருபானந்த வாரியார்...

அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட
கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில்
அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அவதரித்தார்.
செங்குந்த வீர சைவ மரபினர்.


 
 

 


 


 
தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண
வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார். வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே
அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை.
வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார்.

 
  • நன்னூல் முதலான இலக்கண நூல்களையும்,
  • தேவாரம்
  • நளவெண்பா
  • ஒளவையாரது நூல்கள்
  • திருப்புகழ்க் கீர்த்தனைகள்

 
முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப்
பாடல்களையும் கற்பித்தார்.

 


 
பன்னிரண்டு வயது நிரம்பியபோதே

 
  • தேவாரம்
  • திருப்புகழ்
  • திருவருட்பா
  • கந்தபுராணம்
  • கம்பராமாயணம்
  • வில்லிபாரதம்

 
முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அது தான் தம்
வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார்.

 


 
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். வாரியார் இளைஞனாக
இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச்
சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில்
நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக்
கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம்
பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது
சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம்,
திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத
ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்"
பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.

 


 
தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு
செய்யும் திறம் உடையவரானார். 19ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள்
செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே
அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி"
பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சிந்தாந்தக் கருத்துகளையும்
கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய
பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர். சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும்
பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர்
கூறும் நுட்பங்களைக் கேட்டு "இதுகாறும் இதனை அறிந்திலமே" என்று கல்வியில் சிறந்த
புலவர்களும் வியந்து பாராட்டினார்கள்.

 


 
"வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக
உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன" என்று அறிஞர்கள்
புகழ்ந்தார்கள். மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு
இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.

 


 
சுவாமிகள்,

 
  • திருமுருகாற்றுப்படை
  • திருவாசகம்
  • தேவாரம்
  • திருப்புகழ்
  • கந்தர் அலங்காரம்
  • கந்தர் அநுபூதி
  • வேல் விருத்தம்
  • மயில் விருத்தம்
  • திருவகுப்பு
  • திருவருட்பா

 
முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய
சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார்.
சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள். அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி
அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச்
செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். அவருடைய
பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது;
மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

 


 
வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து
இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக்
கொண்டார்கள். சுவாமிகள் 1936ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த
சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்" என்ற மாதப் பத்திரிகையை
வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை
எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத்
தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து
நடத்தினார்.

 


 
அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு
விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல
கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர்
தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. திருப்புகழ் அமிர்தம் என்ற
பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள்
எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். வாரியார்
சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து
கொள்ளும்படியாக 500க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார்.
அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற
நடையில் அமைந்தவை.

 


 
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள்,

 
  • சிவனருட்செல்வர்
  • கந்தவேள் கருணை
  • இராமகாவியம்
  • மகாபாரதம்

 
ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

 


 
கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது
சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

 


 
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு
"தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்" என்ற நூலை அவர் படைத்தார். 20ஆம் நூற்றாண்டின்
இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி.
சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில்
மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம்,
வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒரு முறை விரிவுரை
செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய
கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில்
எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார்
எழுதியுள்ளார்.

 


 
  • கவிதை
  • கட்டுரை
  • கதை
  • காவியம்

 
ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும்
இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித
வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர்
கூறுவர்.

 


 
மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும்
பிரசங்கங்களும், உபந்யாசங்களும் கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

 


 
தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும்
தீட்சை அளித்தமையால்,

 
  • ஞானாசிரியராகவும்
  • மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும்
  • பத்திரிகை ஆசிரியராகவும்
  • பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும்
  • கட்டுரை ஆசிரியராகவும்
  • சிறுகதை எழுத்தாளராகவும்
  • அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும்

 
விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச்
சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின்
விளங்கும்.

 


 
1993 அக்டோபர் 19ஆம் தேதி வாரியார் சுவாமிகள் இலண்டன் பயணமானார்.
ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி
விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக்
கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.

                                                   வாழ்க வளமுடன்

                                                    க.செந்தில்குமார்.