செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




ஞாயிறு, 15 மே, 2011

அக்கினி நட்சத்திரம் ....

'அக்கினி நட்சத்திரம்' என்பது கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்கும். அக்கினிக்கு உரிய நட்சத்திரமாக அது கருதப்படும். அதன்மூலம் முருகனுடனும் சம்பந்தத்தைப் பெற்றுவிடுகிறது. அதுமட்டுமல்லாது, கிரகங்களில் சூரியனின் நட்சத்திரமாகவும் அது விளங்குகிறது. 'பஞ்சாக்னி' என்று சொல்லப்படும் ஐவகை நெருப்புக்களில் சூரியனும் ஒன்று.
                    கார்த்திகை நட்சத்திரங்கள், ஆறு என்று கணக்கிடப்பட்டாலும், அந்த பிரதேசத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.

                    அத்தனையுமே விண்ணியற்காலக் கணிதப்படி, புதியவை; இளமையானவை. அவற்றில் பல, நட்சத்திரமாக உருப்பெறும் நிலையில் உள்ள அக்கினி மையங்களாகும். சில கோடி டிகிரி உஷ்ணத்தைத் தன்னகத்தே கொண்டவை.

                    அண்டப்பெருவெளியிலேயே உஷ்ணம் மிக அதிகமாக விளங்கும்  பிரதேசமாக கார்த்திகை நட்சத்திரக்கூட்டமிருக்கும் இடம் விளங்குகிறது.

                    சோதிடத்தில் இருபத்தேழு நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு பகுதியும் 'கால்' அல்லது 'பாதம்' என்று பெயர் பெறும்.

                    இந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரண்டு ராசிகளிலே இருக்கின்றன. ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரம் இருக்கும்.

                    27/12 = 2 1/4(2.25)
                    1 நட்சத்திரம் = 4 பாதம்/கால்
                    .'. 2 1/4 நட்சத்திரம் = 9 பாதம்/கால்
                    .'. 1 ராசி = 9 நட்சத்திர பாதம்

                    முதலாவது ராசியாகிய மேடம், 'அசுவினி, பரணி', ஆகிய இரு நட்சத்திரங்களை முழுமையாகவும், 'கார்த்திகை' நட்சத்திரத்தின் முதற் கால் பகுதியையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

                    அடுத்த ராசியாகிய இடபத்தில்(ரிஷபம்), கார்த்திகையின் எஞ்சிய மூன்று கால்கள், ரோகிணி முழுதுடன் மிருகசீரிடத்தின் முன் இரு கால்கள் இருக்கும். இப்படியாகவே சென்று, கடைசியில் மீன ராசியின் கடை நட்சத்திரமாகிய ரேவதி நட்சத்திரத்தின் கடைக் காலுடன் முடியும்.

                    மேலே உள்ள விபரத்தின்படி பார்த்தீர்களானால், கார்த்திகை நட்சத்திரத்தின் பகுதிகள், மேடத்தின் கடைசிப் பாதமாகவும், இடபத்தின் முதல் மூன்று பாதங்களாகவும் விளங்கும்.

                வரலாற்றுக்காலத்துக்கும் முற்பட்ட காலத்திலேயே கார்த்திகை நட்சத்திரங்களை மனித இனம் இனம்கண்டு வைத்திருந்தது. தமிழர்கள் சிவ வழிபாடு முருக வழிபாட்டுடன் கார்த்திகையை சம்பந்தப் படுத்தியிருந்தனர். வேதகால ஆரியர்கள் அறிந்திருந்தனர்.


கார்த்திகை மண்டலம்

                கிரேக்கர்களின் கவிஞராகிய ஹோமர் தம்முடைய இலியாட் என்னும் காவியத்தில் கார்த்திகையைக் குறிப்பிடுகிறார். சீனர்களுடைய வானநூல்களிலும் இது இருக்கிறது.
                ஜப்பானியர்கள் இதை ஸ¤பாரு Subaru என்று அழைத்தனர்.
                ஈரானியர்கள் இதை ஸொராயா Soraya என்று குறிப்பிட்டனர்.
                அந்தக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். அவற்றில் Alcyon என்பதே முக்கியமானது.
                இந்த நட்சத்திரங்களை ஏழு சகோதரிகள் என்று கிரேக்கர்களும் மற்றவர்களும் கூறுவார்கள். நம் புராணங்களும் அவ்வாறுதான் கூறின. ஆனால் கார்த்திகைப் பெண்கள் அறுவர் என்றே கணக்கு இருக்கிறது.
                அந்த ஏழாவது பெண் எங்கே?
                ஒரு புராணத்தில் காணப்பட்ட செய்தி:
                கார்த்திகைப் பெண்களாகிய எழுவரும் சப்த ரிஷிகளுக்கு உரியவர்கள். ஆனால் எங்கோ ஏதோ தவறிவிட்டது. ஆகவே இவர்கள் விண்ணில் தனி நட்சத்திரக் கூட்டமாக இருக்கநேர்ந்தது. அவர்கள் தவம் செய்தனர். முருகனை அவர்கள் பால்கொடுத்து வளர்க்கும் பேற்றைப் பெற்றனர். 'அறுவர் பயந்த ஆறமர் செல்வ' என்று பரிபாடல் கூறும்.
                அந்த ஏழாவது பெண்ணாகிய அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிஷ்டரின் அருகில் இருக்கும் பேறு பெற்றாள்.


சப்த ரிஷி மண்டல
ம்
                சப்த ரிஷி மண்டலத்தின் அமைப்பு நன்கு பரிச்சயமானது. அதில் நான்கு நட்சத்திரங்கள் ஒரு நீள்சதுரம்போல் தோன்றும். அதிலிருந்து வளைந்த வால் போல் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக நீண்டு விளங்கும்.
    அந்த மூன்றில் நடுப்பட்ட நட்சத்திரம் வசிஷ்டர். அந்த நட்சத்திரத்துக்கு மிகமிக அருகில் சற்று மங்கிய நட்சத்திரம் இருக்கும். அதுதான் அருந்ததி. மேற்கண்ட படத்தில் வசிஷ்டருடன் சேர்ந்து காணப்படுவதால் இரண்டும் ஒன்றாக சற்று நீண்டு இருப்பதாகத் தோன்றும்
                               இன்னும் கொஞ்சம் கணிதம்:

                     தமிழில் உள்ள சௌரமான ஆண்டுக்கணக்கில் unequal months என்று சொல்லப்படும் 'அசம மாதங்கள்' இருக்கும். ஒரு ராசியை சூரியன் கடப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அதுதான் அந்த மாதத்தின் கால அளவு. சித்திரை, வைகாசி, ஆவணி, ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்கள் 30 நாட்கள் கொண்டவை. ஆனி, ஆடி ஆகியவை 32 நாட்கள் கொண்டவை. மாசி 29 நாட்கள். இந்த மாதங்கள் அனைத்துமே கரெக்டாக அந்தந்த நாட்களில் அலாரம் வைத்துக்கொண்டு மணியடித்துப் பிறப்பதில்லை.
                    சூரியன் எந்த நேரத்தில் புதிய ராசிக்குச்செல்கிறதோ, அந்த நேரத்தில்தான் அந்த மாதம் பிறக்கும். இரவு பகல் என்பதில்லை. 30 நாட்கள் என்றால் கரெக்டாக முப்பது நாட்கள் இராது.  30 plus/minus ஆகவும் இருக்கலாம்.

                    இந்தக ்கணக்கின் படி பார்த்தால், கார்த்திகை நட்சத்திரத்தின் ஒரு பாதத்தின் சராஇசரி கால அளவு 31/9 = 3 நாட்கள் 6 மணி நேரம் சொச்சமாகும்.

                    சித்திரை மாதத்திற்குரிய மேஷ ராசியின் கடைசிப்பாதமும் வைகாசி மாதத்திற்குரிய ரிஷப ராசியின் முதல் மூன்று பாதங்களும் கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரியவை. ஆகவே சித்திரை மாதத்தின் கடைசி மூன்றுஞ் சில்லறை நாட்களும், வைகாசி மாதத்தின் ஆரம்பப் பத்து நாட்களும் கார்த்திகை நட்சத்திரத்தைச் சூரியன் கடந்து செல்லும் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தைத் தவறுதலாக 'பின்னேழு-முன்னேழு' என்று சொல்வார்கள். அதாவது சித்திரையின் பின்னேழுநாட்கள்; வைகாசியின்
முன்னேழு நாட்கள்.
                    ஆனால் உண்மையிலேயே அக்கினி ந்ட்சத்திர நாட்கள் என்பவை சித்திரையின் கடை நான்குடன் வைகாசியின் முற்பத்து நாட்களும் கொண்ட இரண்டு வார காலம்.
                    இந்த காலகட்டத்தைத்தான் 'அக்கினி நட்சத்திரம்' என்று சொல்கிறோம். இக்காலத்தில் இந்த காலகட்டமே கோடையின் உச்சகட்ட வெய்யிற்காலமாகக் கருதப்படுகிறது.

                    சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கோடையின் உச்சகட்டம், இன்னும் சற்றுப்பின்னால் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. பண்டைய எகிப்தியர்களின் கணிப்புப்படி 'Canis Major' என்று அழைக்கப்படும்  நட்சத்திரக்கூட்டத்தில் சூரியன் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தபோது, கோடையின் உச்சகட்டம் ஏற்பட்டது. Canis Major, Canis Minor ஆகியவற்றில் உள்ள 'Canis' என்னும் சொல் நாயைக் குறிப்பதாகும். Canis Majorஇல் உள்ள முக்கிய நட்சத்திரம் Sirius எனப்படும் நட்சத்திரம். இதனை 'Dog Star' என்று அழைப்பார்கள்.


பிரஜாபதி மண்டலம்

                    பிரஜாபதி மண்டலம் என்னும் நட்சத்திரக்கூட்டத்தில் மிருகசீரிஷம் திருவாதிரை ஆகியவை இருக்கின்றன. பிரஜாபதியை மேற்கத்தியார் Orion the Hunter என்று குறிப்பிடுவார்கள். நம் புராணங்கள் பிரஜாபதியை சிவனாகக் கருதும். மான் வேட்டை யாடுவதாக ஐதீகம். மிருகசீரிஷம் என்றாலே மானின் தலைதான்.. வேட்டைக் காரனுடன் இரண்டு நாய்கள் இருக்கும்.  பெரிய நாய் சிறிய நாய் ஆகியவை. அவற்றை Canis Major, Canis Minor என்று குறிப்பிடுவார்கள். அவற்றில் . பெரிய நாயாகிய கானிஸ் மேஜரின் மார்பில் அமைந்துள்ள மிகப் பிரகாசமா நட்சத்திரம்தான் ஸிரியஸ் - Alpha Canis Majoris.
                    
பிரஜாபதி மண்டலத்திற்குத் தெற்கில் இந்த நட்சத்திர மண்டலம் விளங்கும்.
                    பிரஜாபதி மண்டலத்திலும் மிக உஷ்ணமண்டலம் ஒன்று உள்ளது. Belt of Orion என்னும் இடத்தில் அது விளங்கும். சிரியஸ் அந்த வட்டாரத்தில்தான் இருக்கிறது.

                    சிரியஸ் இருக்கும் இடத்திற்கு அருகில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சிரியஸ் தன்னுடைய உஷ்ணத்தையும் அத்துடன் சேர்த்து வெளிடுவதாக நம்பினார்கள். ஆகையால்தான் கோடைக்காலம் அவ்வளவு வெப்பமாக இருப்பதாகவும் நம்பினார்கள்.

                    சிரியஸ்தான் விண்ணிலேயே இரண்டாவது அதிக ஒளி கொண்ட நட்சத்திரம்.
                    அப்படியானால் முதலாவது?
   
                    பண்டைய காலத்தில் ஆடி மாத ஆரம்பத்தில் சூரியன் அந்த நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்துச் செல்வதுண்டு. அதுதான் அப்போது கோடையின் மத்திம கட்டமாக இருந்தது. கி.மு. 3000 - அதாவது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்படியிருந்தது என்று சொல்லலாம். அவ்வமயத்தில்  சூரியன் உதிக்கும்போது சமகாலத்தில் சிரியஸ் கீழ்வானத்தில் தோன்றும். அதே நேரத்தில் எதியோப்பியாவின் மலைப்பிரதேசங்களில் பெருமழை பெய்யும். அம்மழை நீர் பெருக்கெடுத்துக் கீழே இறங்கி வெள்ளை  நைல் ஆற்றின்வழி ஓடிவரும். இவ்வாறு நைல் நதியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது சிறப்பு விழாக்கொண்டாடி வழிபாடு நடத்துவார்கள். நீர் வளம்  மட்டுமின்றி நிலவளத்தையும் வண்டல் மண் மூலம் அந்த நீர்ப்பெருக்கு ஏற்படுத்தியது. இதெல்லாம் இப்போது ஏற்படுவதில்லை. அஸ்வான் அணை தடுத்துவிட்டது. பண்டைய எகிப்தியர்கள், நைல் நதியை 'Sirius' என்று அந்த நட்சத்திரத்தின் பெயரால் அழைத்தார்கள்.

                    Sirius என்னும் நட்சத்திரம், எகிப்தியரின் முக்கிய தேவர்களில் ஒருவரான Anubisஸ¤க்கு உரியது.
                    நாய்த்தலையுடன் காணப்படும் அந்த தேவன், காட்டுநாய் அல்லது நரித்தலையுடனும் காட்சியளித்தார். முழுமையான நாயுருவத்துடனும் காணப்படுவதுண்டு. இறந்தவர்களைகீழ் உலகத்திற்கு இட்டுச்செல்லும் ஆவி உலகத்துத் தேவனாகவும் பாவபுண்ணியங்களைக் கணக்கிடுபவராகவும் இருந்தார்.
                    இந்த தேவனை 'Return of the Mummy' படத்தில் காணலாம்.
                    அந்த மாதிரி கடுங்கோடை நாட்களை அவர்கள் 'Dog Days' என்று அழைத்தார்கள்.
                    இப்போதும்கூட Dog Days என்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் வேறு அர்த்தத்தில். சிரமநிலையில் இருக்கும் காலத்தை Dog Days என்று சொல்கிறார்கள்.

                     ஆரம்பகாலத்தில் அக்கினி நட்சத்திரம்தான் Dog Days ஆக இருந்தது. ஆனால் அந்த அக்கினி நட்சத்திரம் கார்த்திகை அல்ல; சிரியஸ்.

அங்க்கோர் வாட் அதிசய சிற்பம்......

அங்க்கோர் வாட் அதிசய சிற்பம்



தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி.
ஒருபுறம் அசுரர்கள்; மறுபுறம் தேவர்கள். வாசுகி என்னும் பாம்பை மந்தர மலை என்னும்
மலையில் சுற்றி இப்படியும் அப்படியுமாக இழுத்துக் கடலை கடைகின்றனர். அமிழ்ந்துபோன
மலையை மஹாவிஷ்ணு தாங்கி, தூக்கி நிறுத்துகிறார். அத்துடன் வாசுகியையும் பிடித்து
ஒழுங்குசெய்கிறார்.




அசுரர்களுடன் சேர்ந்துகொண்டு பாம்பின் தலைக்கு அருகில் கார்த்தவீரியார்ஜுனன்





தேவர்களுடன் சேர்ந்துகொண்டு பாம்பின் வால்ப்பகுதியில் வாலி.
               இந்தப் படங்கள் அங்க்கோர் வாட் கோயிலில் உள்ளவை. சுவற்றில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் - friezes.
                அங்க்கோரில் வேறெங்கும் பார்க்க இயலாத பல அற்புதப் படைப்புகளைப் பார்க்கலாம். 
                லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருந்ததாகச் சொல்வார்கள்.
                இந்தியாவில்கூட மறக்கப்பட்டுவிட்ட, காணக்கிடைக்காத பல புராணக் காட்சிகளை அங்க்கோரில் பார்க்கலாம்.
                சில நுட்பமான காட்சிகளும் இருக்கின்றன.
   
                அகத்திய ·போட்டோஸில் மூன்று படங்கள் ஒரு புராணக்காட்சியைச் சொல்கின்றன.

                 மஹாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரக் காட்சி.
                இதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன்.

                ஒருமுறை தூர்வாச முனிவருக்கு அரியதொரு அற்புத மாலை கிடைத்தது.
                இந்த மாலையை முனிவராகிய தூர்வாசர் அணிந்துகொள்ள விரும்பாமல் தேவ லோக அதிபதியாகிய இந்திரனிடம் கொடுக்கச் சென்றார்.
                இந்திரன் அப்போது தன் யானையாகிய ஐராவதத்தின் மீது வந்துகொண்டிருந்தான்.
               மாலையை நீட்டிய தூர்வாசரிடமிருந்து மாலையை யானையின் மீதிருந்தவாறு வஜ்ராயுதத்தை நீட்டி அதில் மாலையை வாங்கினான்.
                அந்த மாலையை ஐராவதத்தின் மத்தகத்தில் வைத்தான். அது அந்த மாலையைப் பிடுங்கிப் பிய்த்துப்போட்டு காலாச் மிதித்துத் துவைத்துவிட்டது.
                தூர்வாசருக்குக் கோபம் மேலிட்டு இந்திரனுடைய செல்வங்களெல்லாம் அவனைவிட்டு அகன்று விடுமாறு சபித்துவிட்டார்.
   
                மஹாலட்சுமி அவனை விட்டு அகன்றாள். அத்துடன் இந்திரனுடைய ஐந்தர்யமெல்லாம் அகன்று விட்டது. ஐராவதமும் போய்விட்டது. 
                பிரஹஸ்பதிதான் தேவகுரு.
                இந்திரனுடைய செல்வங்களெல்லாம் பாற்கடலில் மறைந்து போய்விட்டதாகவும், அதைக் கடைந்தால் அவற்றையெல்லாம் பெறலாம் என்றார் தேவகுரு.

                தேவர்கள் மட்டும் கடையமுடியாது. ஆகவே அசுரர்களுடைய உதவியையும் நாடினார்கள்.
                பாற்கடலிலிருந்து வரும் பொருள்களில் அமிர்தமும் இருக்கும் என்பதால் அதைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் சொன்னார்.
                அதன் பேரில் அசுரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
                அஷ்டகுல பர்வதங்களில் ஒன்றான மந்திர மலையை மத்தாகக் கொண்டு, அஷ்டநாகங்களில் ஒன்றான வாசுகியை மத்தைக் கடையும் நாணாகக் கொண்டு கடையலானார்கள்.
                வாசுகியின் தலையுடன்கூடிய முன்பாதியை அசுரர்கள் பிடித்துக்கொண்டார்கள். வாலுடன் கூடிய பின்பாதியை தேவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.
                அப்போது மந்திர மலையின் கனம் தாங்காமல் அது பால்கடலில் அமிழ்ந்தது.
                அப்போது மஹாவிஷ்ணு ஆமை உருவெடுத்து மந்திர மலையின் அடிப்பாகத்துக்குச் சென்று தன்னுடைய முதுகின்மீது அம்மலையைத் தாங்கித் தூக்கிப்பிடித்தார்.
                தேவர்கள், அசுரர்கள் இரு சாரரும் சேர்ந்தும்கூட அவர்களால் இழுத்துப்பிடித்துக் கடைய முடியவில்லை.
                இணையற்ற வலிமையும் பலமும் பராக்கிரமும் கொண்டவர்களின் துணை வேண்டியிருந்தது.
                அப்படிப்பட்டவர்கள் இருவர் இருந்தனர்.  

முதலாவது ஆள்:

                கிருதவீர்யன் என்றொரு அரசன். அவனுக்குக் குழந்தையில்லாமலிருந்தது. கிருதவீர்யனின் தந்தை இறந்துபோய் பிதுர் லோகத்தில் இருந்தான். அவனுக்கு பயமேற்பட்டது. கிருதவீர்யன் பிள்ளையில்லாமல் செத்தானானால் அவனும் அவன் தந்தையும் இன்னும் பத்தொன்பது தலைமுறை மூதாதையரும் 'புத்' என்னும் நரகத்தில் வீழ்ந்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்க நேரிடும்.
                ஆகவே அவன் பிரம்மாவிடம் சென்று வழி கேட்டான்.
                கிருதவீர்யன் வினாயகரை நோக்கி செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று வினாயகருக்கு விரதமிருந்து அங்காரக பூஜையையும் சந்திர பூஜையையும் செய்து வினாயகரை வழிபட்டால்  பிள்ளை பிறக்கும் என்று சொல்லி விரதபூஜையை விவரிக்கும் நூலொன்றையும் கொடுத்தான். அதனை வாங்கிக்கொண்டு தந்தை, கிருதவீர்யனின் கனவில் தோன்றி விஷயத்தைச் சொல்லிவிட்டு, அங்கு ஓரிடத்தில் நூலை வைத்துவிட்டான்.
                என்னடாது.....பிதுர்லோகத்தில் உள்ளவன்.... எப்படி ஒருத்தன் கனவில் வந்து விபரத்தைச்சொல்லிவிட்டு, அப்புறம் எப்படி தூல உலகில் நூலை வைக்கமுடியும் என்று நினைக்கத்தோன்றும்.

                பிதுர்லோகம் வேறு பரிமாணங்களில் உள்ளது. கனவு இன்னொரு செட் பரிமாணம். தூல உலகம் வேறொரு செட் பரிமாணம். Multidimensional போக்குவரவு உள்ளவர்கள் பிதுர்கள்.
                "போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே" என்று அழைக்கப்படும் சிவனே எந்த டைமென்ஷனிலும் போக வர இருக்கமாட்டான். ஏனென்றால் எல்லா டைமென்ஷனுமாக இருப்பவனும் அவன்தான். எல்லா டைமென்ஷனிலும் இருப்பவனும் அவன்தான். எல்லா டைமென்ஷன்களிலும் உள்ள எல்லா இடங்களிலும் இருப்பவனும் அவனே. அந்த இடங்களாக இருப்பவனும் அவனே. ஆகவே இங்கும் அங்கும் எங்கும் போகவேண்டியவனில்லை.
                அந்த நூலை எடுத்துப்பார்த்த கிருதவீர்யன் அதன்படி சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இருந்தான்.
   
                மஹாவிஷ்ணுவிடம் விஜயந்தா என்னும் கதையும், சுதர்சனம் என்னும் சக்கரமும் இருந்தன. அவற்றில் சுதர்சன சக்கரத்துக்கு கர்வம் மேலிட்டது. என்னடாது.....ஆயுதத்துக்கெல்லாம் கர்வமாவது என்று நினைக்கத ்தோன்றும். தெய்வீக ஆயுதங்கள் உள்ளதைச் சொல்லும்; சொன்னதைச் செய்யும்; அதுபோக மற்றதுகளும் தெரியும்.
                இதையறிந்த மஹாவிஷ்ணு அதை மனிதனாகப் பிறக்குமாறு ஆணையிட்டுவிட்டார்.
                பிள்ளைவரம் வேண்டி தவமிருக்கும் கிருதவீர்யனுக்கு மகனாக சுதர்சனம் பிறந்தது.
                கிருதவீர்யன் தன்னுடைய மகனுக்கு அர்ஜுனன் என்று பெயர் வைத்தான்.
                ஆனால் ரொம்பவும் சந்தோஷப்படமுடியவில்லை.
                அர்ஜுனன் கைகளும் கால்களுமில்லாமல் பிறந்திருந்தான்.
                வயது வந்ததும் வாழ்க்கை வெறுத்துப்போன அர்ஜுனன் தன்னை ஒரு காட்டில் கொண்டுபோய் விடச்செய்தான். அங்கிருந்த ஒரு தடாகத்தின் கரையில் ஒரு மரத்தடியில் அவனை விட்டார்கள்

                அங்கிருக்கும்போது ஒரு ரிஷி அவனைக் கண்டு அவனுக்கு விநாயக ஏகாக்ஷரி என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.

                அதனைக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஜபம் செய்து தவமியற்றினான் அர்ஜுனன்.
                விநாயகர் தடாகத்தில் தோன்றினார். அவருடைய பாதங்களில் விழ அவனால் முடியவில்லை. அவனை விநாயகர் அழைத்தார். அவனுக்கு இரு கால்களும் ஆயிரம் கைகளையும் எல்லையில்லா பராக்கிரமத்தையும் அளவற்ற பலத்தையும் கொடுத்தார். அத்துடன் பவளத்தால் ஆன விநாயக விக்ரத்தையும் தந்தார்.
                காட்டிற்குள் தரணிதரம் என்னும் பெரிய நகரத்தை ஏற்படுத்திக்கொண்டு பேரரசனாக ஆண்டுவந்தான்.
                பவளவிநாயகரை 'தரணீதர விநாயகர்' என்று பெயரிட்டு வழிபட்டான்.

                விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
                அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன் கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும்.
                அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல வரங்களையும் பெற்றான்.
                அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்தானே சொல்லவேண்டும் குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப் பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி.

                விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும் உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள்.
                குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான்.

                தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும் லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான்.

                விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர் அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும் கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.

                ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான். சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.    
                மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது.
                சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத் தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார்.
                மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு நசுக்கியது.
                வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
                அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது.




                பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல் அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச் சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும் பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான்.

                மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல் முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும் பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்படமுடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார்.

                சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான் அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம் கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.

                அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார்.
                'ராவணம்' என்றால் 'அலறல்'.

                இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து, பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு, "கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார்.   

                பலவரங்களும் ஆயுதங்களும் பெற்ற ராவணன் மூவுலகங்களையும் வென்று அடக்கினான். தேவர்கள் அவனுடைய ஏவலாட்களாக ஆகினர். நவக்கிரகங்கள் அவனுடைய சிம்மாசனத்துக்கு ஏறும் படிப்பட்டுகளாக ஆகின.
                தனக்கு இந்த வாழ்வைத் தந்த சிவனை மறவாது எப்போதும் தவறாது பூஜை செய்துவந்தான்.
                ஒருநாள் ஒரு ஆற்றங்கரையில் இருந்து பூஜை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ராவணனை அடித்துக்கொண்டு போயிற்று. சிவபூஜையும் குலைந்துவிட்டது.
                ஆத்திரமடைந்த ராவணன் திடீர் வெள்ளமேற்பட்ட காரணத்தை அறியச்சென்றான்.
   
                சமஸ்கிருதத்தில் ஒரு வழக்கு உண்டு. தந்தையின் பெயரையோ தாயின் பெயரையோ மூதாதையின் பெயரையோ தன்னுடைய பெயராக்கிக் கொள்ளலாம்.
                தசரதன் மகன் தாசரதி.
                ஜனகன் மகள் ஜானகி
                விஸ்ரவாஸ் மகன் வைஸ்ரவன்
                குருவின் தோன்றல்கள் கௌரவர்.
                யது வம்சத்தான் யாதவன்
                ரகுவின் வழித்தோன்றல் ராகவன்

                பல அர்ஜுனர்கள். அவர்களிடமிருந்து வேறு படுத்திக்கொள்வதற்காக அர்ஜுனன் தனக்கு 'Son of' Prefix  கொடுத்துக்கொண்டு அர்ஜுனன் son of கிருதவீர்யன் - 'கார்த்தவீர்ய அர்ஜுனன்' ஆகிவிட்டான்.    
   
                தூரத்தில் ஆற்றில் கார்த்தவீர்யார்ஜுனன் தன்னுடைய பல மனைவிகளுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தான். ஆற்றின் குறுக்கே தன்னுடைய ஆயிரம் கைகளையும் வைத்து தண்ணீரை அணை போல் தேக்கிவைத்து அதில் நீந்திக்குளித்துக்கொண்டு திடீரென்று கைகளை எடுத்துவிடும்போது அடைபட்ட தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப்பெருக்குபோல் வந்திருக்கிறது. அதுதான் ராவணனின் சிவபூஜையைக் குலைத்துவிட்டது.

                கோபப்பட்ட ராவணன் கார்த்தவீர்யனைக் குத்தச்சென்றான்.
                கார்த்தவீர்யன் திரும்பிக்கூடப் பார்க்காமல் குத்தச்சென்ற கையைப் பிடித்துக்கொண்டான். அவனுக்குத்தான் இருபது கையாச்சே. இன்னொரு கையால் குத்தினான். அதை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டான். இப்படி ஒவ்வொரு கையையும் கால்களையும் பிடித்துக்கொண்டுவிட்ட பின்னரும் கார்த்தவீர்யனின் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு கைகள் மீதமிருந்தன.

                பார்த்தான் ராவணன்.
                கொஞ்சமும் விசும்பமுடியவில்லை. மூச்சு முட்டியது. பார்க்குமிடமெல்லாம் கைகள், கைகள், கைகள் -
                எல்லாமே கார்த்தவீர்யனின் கைகள்.

                என்ன செய்யலாம் என்று கார்த்தவீர்யன் யோசித்துக் கொண்டிருந்தான்.

                ஏனெனில் ராவணைன் வரங்கள் இருக்கின்றன. ஆகவே அவனைக் கொல்லவும் முடியாது.
                கடைசியில் ராவணனின் பரிதாப நிலையைப் பார்த்து அவனை விரட்டிவிட்டான்.

இரண்டாவது ஆள்:

                ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள்.
                ஒருமுறை கயிலைக்கு சிவனைப் பார்க்க வந்திருந்தார். சிவனுக்கும் ஐந்துதலைதான் என்பதாலும் தாமே படைப்புக்கடவுள் என்பதாலும் பிரம்மா மிகுந்த செருக்குடன் வந்தார்.
                இதனை அறிந்த சிவபெருமான் பிரம்மாவுடைய ஐந்தாவது தலையைப் பற்றித் திருகிக் கிள்ளிப் பறித்துவிட்டார்.
                பிரம்மாவுக்கு நாலுதலையாகிவிட்டது.
                வலி தாங்காமல் பிரம்மாவின் கண்களிலிருந்து நீர் சிந்தியது.
                அந்த பிரம்ம கண்ணீர்த்துளிகள் ஒரு மனிதனாக மாறின.
   
                ஆனால் சிவனுடைய கையில் பிரம்மாவின் கபாலம் ஒட்டிக்கொண்டுவிட்டது. பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் சிவனுடைய தோற்றமும் தன்மையும் மாறிவிட்டது.

                நிர்வாண உருவுடன் தலையில் ஜ்வாலாமகுடம், இடையில் நாகாபரணம், நாக உபவீதம், நாக சன்னவீரம், நாகஹாரம்; கையில் டமருகம், பாம்பு, திரிசூலம், பிரம்ம கபாலம்; நாய் வாகனம்.
                இவற்றுடன் காசியில்  பிச்சைக்காகத் திரிந்தார்.

                பிரம்மாவின் கண்ணீர்த்துளி மனிதன் சிவனை விரட்டிக்கொண்டு வந்தான்.
                அப்போது பிரம்ம கபாலத்தில் விஷ்ணு பிச்சையிட்டார்.
                சாதாரணப் பிச்சையல்ல.
                தம்முடைய ரத்தத்தையே பிச்சையாக இட்டார்.
                அந்த ரத்தத்திலிருந்து ஒரு மனிதன் தோன்றினான்.
                அவன் பிரம்ம கண்ணீர்த்துளி மனிதனைத் தடுத்து எதிர்த்தான்.
                இருவரும் போரிட ஆரம்பித்தனர்.
                மஹாவிஷ்ணுவின் ஆணைப்படி அவர்கள் பிறவிகள் எடுத்து அந்தப் பிறவிகளில் தங்களுடைய விரோதத்தைக் காட்டிக்கொண்டு போரிட்டு, ஒருவரை ஒருவர் கொன்று, அதன் பின்னர் தம்மிடம் வந்து சேரும்படி ஆயிற்று.

                கிஷ்கிந்தை என்னும் நகரம் வானரர்களுக்குரியது.
                அங்கு வானர ராஜா ஒருவன் இருந்தான்.
                அவனுடைய மகள் ஒரு பேரழகி.
                வானர இளவரசி எப்படி பேரழகியாக இருக்கமுடியும் என்று கேட்கத் தோன்றும். ஜாம்பவான் ஒரு கரடி. கரடிக்கு ஜாம்பவதி என்றொரு மகள். பேரழகி. கிருஷ்ண பரமாத்மா அவளைத் திருமணம் செய்துகொள்வார்.
                கரடிராஜாவுடைய மகள் பேரழகி என்னும்போது வானரராஜாவின் மகளும் பேரழகியாகலாம்தானே.
                அந்த இளவரசி உலாவிக்கொண்டிருந்தபோது இந்திரனும், சூரியனும் அவளைப் பார்த்துவிட்டார்கள்.
                அவளைப் பார்த்தவுடனே இந்திர வீர்யமும் சூரிய வீர்யமும் அவளுக்குள் சேர்ந்துவிட்டது.
                இரு குழந்தைகள் பிறந்தன.
                இந்திரனின் மகன் வாலி. நேர்த்தியான வால் அவனுக்கு.
                சூரியனின் மகன் சுக்கிரீவன். சிறந்த கழுத்து இவனுக்கு.
                இவர்கள் வேறு யாருமல்ல.
                பிரம்ம கண்ணீர்த்துளிக்காரன்தான் இந்திரன் மகனான வாலியாகப் பிறந்தான்.
                விஷ்ணுவின் ரத்தத்திலிருந்து தோன்றியவன் சூரியனுடைய மகனாகிய சுக்கிரீவன்.

                இவர்களில் வாலி வானர அரசனாகினான். மிகுந்த பலசாலி. அவன் வரங்கள் பல பெற்றவன். எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் ஏழு மராமரங்கள் ஒரே கோட்டில் வரும் ஒரு சின்னஞ்சிறு கண நேரத்துக்குள் ஏழையும் துளைத்துச்செல்லும்வண்ணம் யார் அம்பு விடுகிறார்களோ அவர்களே வாலியைக் கொல்லமுடியும்.
                இன்னொரு வரம் இன்னும் சிக்கலானது. வாலியை எதிர்த்து யார் போரிட வருகிறார்களோ, அவர்களை வாலி பார்த்த மாத்திரத்தில் எதிர்த்து வருகின்றவர்களின் பலத்தில் சரிபாதி வாலிக்கு வந்து விடும்.
                ஏற்கனவே வாலி மிகுந்த பலசாலி. அவனளவுக்கு வேறு யாரும் பலம் படைத்தவர்கள் வெகு சிலரே.
                அப்படியே இருந்தாலும்கூட வாலியை யாரும் நேருக்கு நேர் எதிர்த்து நின்று சண்டையிடமுடியாது. ஏனெனில் மிகுந்த பலசாலியாகிய வாலியின் இயற்கையான பலத்துடன் எதிரியின் பலத்தில் பாதியும்
சேர்ந்துகொண்டுவிடும். எதிரியின் பலமும் பாதியாகிவிடும்.

                அப்பேற்பட்ட வாலியும் சிறந்த சிவ பக்தன். ஒரே காலைவேளையில் நான்கு திசைகளிலும் உள்ள சமுத்திரக்கரைகளுக்குச் சென்று அங்கு சிவபூஜை செய்வான்.

                அவ்வாறு ஒருமுறை சிவபூஜை செய்யும்போது, ராவணன் அந்தப் பக்கம் வந்தான்.

                'என்னடாது.....? குரங்கு.......சிவபூசை செய்வதாவது!' என்று அருகில் வந்து பார்த்தான். அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.
                ஆகவே வாலியைத் தொந்தரவு செய்தான். வாலி அவனை அசட்டை செய்தான்.
                ராவணன் வாலியின் வாலைப் பிடித்துத் தூக்கி எறிவதற்குப் போனான்.
                வாலி திரும்பவேயில்லை. தேவையும் ஏற்படவில்லை.
                வாலியின் வால் மட்டும் தானாகவே நீண்டு வளைந்து ராவணனின் உடலில் சுற்றி இறுக ஆரம்பித்தது.                   
                ராவணனின் பத்துத்தலைகள் மட்டுமே வெளியில் தெரிந்தன.

                இதே நிலையில் ராவணனை வைத்துக்கொண்டிருந்தான் வாலி.
                அந்தக் கரையில் சிவபூஜை முடிந்தபிறகு இன்னொரு கரைக்கு வாலி சென்றான். அப்போது வாலில் கட்டியிருந்த ராவணனை வாலி கண்ட கடவெல்லாம் தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றான்.
                இப்படியாக நான்கு சமுத்திரக்கரைகளுக்கும் சென்று சிவபூஜை செய்தபிறகு, தன்னுடைய அரண்மனைக்கு வாலி சென்றான்.
                அங்கு அவனுடைய குழந்தையாகிய அங்கதன் படுத்திருந்த தொட்டிலின் குறுக்குக் கம்பத்தில் அவனைக் கட்டி அங்கதனிடம் விளையாடக் கொடுத்துவிட்டான்.
                அங்கதனும் ராவணனின் தலைகள், கைகள் எல்லாவற்றையும் பிடித்து இழுத்து இம்சை செய்தான்.
                கடைசியில் அவன் மன்றாடி மன்னிப்புக் கேட்டவுடன், வாலி அவனை விடுவித்தான்.
                இருவரும் நட்புக்கொண்டதுடன் கிஷ்கிந்தையின் பக்கத்திலேயே வருவதில்லை என்று ராவணன் உறுதிமொழி தந்தான்.

                ராவணன் மிகுந்த பலசாலி. அவனை வெல்ல முடிந்தவர் இல்லை என்று நம்பப்பட்ட காலத்தில் அவனை வென்றவர்கள் இருவர்.
                ஒருவன் கார்த்தவீர்யார்ஜுனன்.
                இன்னொருவன் வாலி.
   
                ஆகவே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பால்கடலைக் கடைவதில் உதவி செய்வதற்கு வாலியையும் கார்த்தவீர்யார்ஜுனனையும் அழைத்தார்கள்.

                Tug-o-war என்னும் கயிறு இழுக்கும் போட்டி பள்ளியிலும் கல்லூரியிலும் இருக்கும். அதில் பலசாலிகளாகவும் இருந்து பெரிய உருவமும் படைத்தவர்களை Anchor-men என்ற கடைசி ஆட்களாகப் போடுவார்கள்.
                மற்றவர்கள் கயிற்றைப் பிடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
                ஆனால் நங்கூர ஆசாமியோ கயிற்றின் ஒரு முனையைத் தன் உடம்பில் நன்கு சுற்றிக்கொண்டிருப்பார்.
                அதுபோல.....
                வாசுகிப் பாம்பின் தலைப் பகுதியில் நங்கூர மனிதனாகக் கார்த்தவீர்யார்ஜுனனும் வால் பகுதியில் வாலியும் இருந்துகொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள்.

                அந்தக் காட்சியைத்தான் அகத்தியர் ·போட்டோப்பகுதியில் கடைசி மூன்று படங்களிலும் நீங்கள் பார்க்கிறீர்கள்.

                வாலி, கார்த்தவீர்யார்ஜுனன், கூர்மாவதார விஷ்ணு ஆகியவர்கள் இருக்கும் படங்களைக் காணலாம்.

நன்றி

ருத்ராக்ஷம்-part-1..

ருத்ராக்ஷம் என்பது ருத்ரனின் ஆக்ஷம் என விளக்குபவர் உண்டு. ஆக்ஷம் என்றால் கண்ணீர் என பொருள்பட சிவனின் கண்ணீர் என ருத்ராக்ஷம் எனும் சொல்லை மொழி பெயர்ப்பார்கள்.சிவன் ஏன் அழவேண்டும்? அவருக்கு என்ன கஷ்டம் வந்தது அழுது கண்ணீர் வடிக்கும் அளவிற்கு, என குழப்பம் கொள்ளும் அளவிற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு அமைந்து விடுகிறது. ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம் என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என பொருள்கொள்ளலாம். ருத்ரநிலையில் தனது புருவ மத்தியில் உள்ள மூன்றாம் கண்ணை திறக்கும் பொழுது வெளிப்பட்டஆற்றல் திண்ம வடிவில் மாற்றம் அடைவதே ருத்ராக்ஷம் என அழைக்கிறோம்.

ஆக்ஷம் என்ற சொல்லுக்கு " கண்ணிலிருந்து வெளிப்படுவது" என்றும்பொருள்கொள்ளமுடியும். ருத்ரனின் நெற்றி கண்ணிலிருந்து உதிரும் பொருள் என சரியாக மொழி பெயர்க்க வேண்டும். இதன் மூலம் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.


ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.


ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வகையில் உடைந்து விடுவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.


தியான நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும முறையில் ஆற்றலை கடத்துதல், அவர்களின் ஆன்மாவுடன் உரையாடுதல் என ருத்ராக்ஷம் ஒர் உயிராகவே செயல்படும். 108 மணிகள் கொண்ட ருத்ராக்ஷ மாலை அணிந்து வலம் வருபவர் ஒரு கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உலா வருவதற்கு சமமான செயலை செய்கிறார் என்பதை உணரவேண்டும்.


ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.


தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

எனக்கு தெரிந்த ஓர் சினிமா நடிகர்
ருத்ராக்ஷத்தை தவறாக ஃஷேன் ஷோவில் பயன்படித்தினார். அதுவரை சிறப்பாக இருந்த அவரின் வெற்றிகள் தடம்மாற துவங்கின. அதனால் ருத்ராக்ஷம் பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை.
குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.


மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.


ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.


ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.


ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.


ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.


1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.


3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.

4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.


5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.


தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.


ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும்
ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.

ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.