அங்க்கோர் வாட் அதிசய சிற்பம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி.
ஒருபுறம் அசுரர்கள்; மறுபுறம் தேவர்கள். வாசுகி என்னும் பாம்பை மந்தர மலை என்னும்
மலையில் சுற்றி இப்படியும் அப்படியுமாக இழுத்துக் கடலை கடைகின்றனர். அமிழ்ந்துபோன
மலையை மஹாவிஷ்ணு தாங்கி, தூக்கி நிறுத்துகிறார். அத்துடன் வாசுகியையும் பிடித்து
ஒழுங்குசெய்கிறார்.
அசுரர்களுடன் சேர்ந்துகொண்டு பாம்பின் தலைக்கு அருகில் கார்த்தவீரியார்ஜுனன்
தேவர்களுடன் சேர்ந்துகொண்டு பாம்பின் வால்ப்பகுதியில் வாலி.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி.
ஒருபுறம் அசுரர்கள்; மறுபுறம் தேவர்கள். வாசுகி என்னும் பாம்பை மந்தர மலை என்னும்
மலையில் சுற்றி இப்படியும் அப்படியுமாக இழுத்துக் கடலை கடைகின்றனர். அமிழ்ந்துபோன
மலையை மஹாவிஷ்ணு தாங்கி, தூக்கி நிறுத்துகிறார். அத்துடன் வாசுகியையும் பிடித்து
ஒழுங்குசெய்கிறார்.

அசுரர்களுடன் சேர்ந்துகொண்டு பாம்பின் தலைக்கு அருகில் கார்த்தவீரியார்ஜுனன்

தேவர்களுடன் சேர்ந்துகொண்டு பாம்பின் வால்ப்பகுதியில் வாலி.
இந்தப் படங்கள் அங்க்கோர் வாட் கோயிலில் உள்ளவை. சுவற்றில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் - friezes.
அங்க்கோரில் வேறெங்கும் பார்க்க இயலாத பல அற்புதப் படைப்புகளைப் பார்க்கலாம்.
லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருந்ததாகச் சொல்வார்கள்.
இந்தியாவில்கூட மறக்கப்பட்டுவிட்ட, காணக்கிடைக்காத பல புராணக் காட்சிகளை அங்க்கோரில் பார்க்கலாம்.
சில நுட்பமான காட்சிகளும் இருக்கின்றன.
அகத்திய ·போட்டோஸில் மூன்று படங்கள் ஒரு புராணக்காட்சியைச் சொல்கின்றன.
மஹாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரக் காட்சி.
இதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன்.
ஒருமுறை தூர்வாச முனிவருக்கு அரியதொரு அற்புத மாலை கிடைத்தது.
இந்த மாலையை முனிவராகிய தூர்வாசர் அணிந்துகொள்ள விரும்பாமல் தேவ லோக அதிபதியாகிய இந்திரனிடம் கொடுக்கச் சென்றார்.
இந்திரன் அப்போது தன் யானையாகிய ஐராவதத்தின் மீது வந்துகொண்டிருந்தான்.
மாலையை நீட்டிய தூர்வாசரிடமிருந்து மாலையை யானையின் மீதிருந்தவாறு வஜ்ராயுதத்தை நீட்டி அதில் மாலையை வாங்கினான்.
அந்த மாலையை ஐராவதத்தின் மத்தகத்தில் வைத்தான். அது அந்த மாலையைப் பிடுங்கிப் பிய்த்துப்போட்டு காலாச் மிதித்துத் துவைத்துவிட்டது.
தூர்வாசருக்குக் கோபம் மேலிட்டு இந்திரனுடைய செல்வங்களெல்லாம் அவனைவிட்டு அகன்று விடுமாறு சபித்துவிட்டார்.
மஹாலட்சுமி அவனை விட்டு அகன்றாள். அத்துடன் இந்திரனுடைய ஐந்தர்யமெல்லாம் அகன்று விட்டது. ஐராவதமும் போய்விட்டது.
பிரஹஸ்பதிதான் தேவகுரு.
இந்திரனுடைய செல்வங்களெல்லாம் பாற்கடலில் மறைந்து போய்விட்டதாகவும், அதைக் கடைந்தால் அவற்றையெல்லாம் பெறலாம் என்றார் தேவகுரு.
தேவர்கள் மட்டும் கடையமுடியாது. ஆகவே அசுரர்களுடைய உதவியையும் நாடினார்கள்.
பாற்கடலிலிருந்து வரும் பொருள்களில் அமிர்தமும் இருக்கும் என்பதால் அதைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் சொன்னார்.
அதன் பேரில் அசுரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
அஷ்டகுல பர்வதங்களில் ஒன்றான மந்திர மலையை மத்தாகக் கொண்டு, அஷ்டநாகங்களில் ஒன்றான வாசுகியை மத்தைக் கடையும் நாணாகக் கொண்டு கடையலானார்கள்.
வாசுகியின் தலையுடன்கூடிய முன்பாதியை அசுரர்கள் பிடித்துக்கொண்டார்கள். வாலுடன் கூடிய பின்பாதியை தேவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.
அப்போது மந்திர மலையின் கனம் தாங்காமல் அது பால்கடலில் அமிழ்ந்தது.
அப்போது மஹாவிஷ்ணு ஆமை உருவெடுத்து மந்திர மலையின் அடிப்பாகத்துக்குச் சென்று தன்னுடைய முதுகின்மீது அம்மலையைத் தாங்கித் தூக்கிப்பிடித்தார்.
தேவர்கள், அசுரர்கள் இரு சாரரும் சேர்ந்தும்கூட அவர்களால் இழுத்துப்பிடித்துக் கடைய முடியவில்லை.
இணையற்ற வலிமையும் பலமும் பராக்கிரமும் கொண்டவர்களின் துணை வேண்டியிருந்தது.
அப்படிப்பட்டவர்கள் இருவர் இருந்தனர்.
முதலாவது ஆள்:
கிருதவீர்யன் என்றொரு அரசன். அவனுக்குக் குழந்தையில்லாமலிருந்தது. கிருதவீர்யனின் தந்தை இறந்துபோய் பிதுர் லோகத்தில் இருந்தான். அவனுக்கு பயமேற்பட்டது. கிருதவீர்யன் பிள்ளையில்லாமல் செத்தானானால் அவனும் அவன் தந்தையும் இன்னும் பத்தொன்பது தலைமுறை மூதாதையரும் 'புத்' என்னும் நரகத்தில் வீழ்ந்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்க நேரிடும்.
ஆகவே அவன் பிரம்மாவிடம் சென்று வழி கேட்டான்.
கிருதவீர்யன் வினாயகரை நோக்கி செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று வினாயகருக்கு விரதமிருந்து அங்காரக பூஜையையும் சந்திர பூஜையையும் செய்து வினாயகரை வழிபட்டால் பிள்ளை பிறக்கும் என்று சொல்லி விரதபூஜையை விவரிக்கும் நூலொன்றையும் கொடுத்தான். அதனை வாங்கிக்கொண்டு தந்தை, கிருதவீர்யனின் கனவில் தோன்றி விஷயத்தைச் சொல்லிவிட்டு, அங்கு ஓரிடத்தில் நூலை வைத்துவிட்டான்.
என்னடாது.....பிதுர்லோகத்தில் உள்ளவன்.... எப்படி ஒருத்தன் கனவில் வந்து விபரத்தைச்சொல்லிவிட்டு, அப்புறம் எப்படி தூல உலகில் நூலை வைக்கமுடியும் என்று நினைக்கத்தோன்றும்.
பிதுர்லோகம் வேறு பரிமாணங்களில் உள்ளது. கனவு இன்னொரு செட் பரிமாணம். தூல உலகம் வேறொரு செட் பரிமாணம். Multidimensional போக்குவரவு உள்ளவர்கள் பிதுர்கள்.
"போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே" என்று அழைக்கப்படும் சிவனே எந்த டைமென்ஷனிலும் போக வர இருக்கமாட்டான். ஏனென்றால் எல்லா டைமென்ஷனுமாக இருப்பவனும் அவன்தான். எல்லா டைமென்ஷனிலும் இருப்பவனும் அவன்தான். எல்லா டைமென்ஷன்களிலும் உள்ள எல்லா இடங்களிலும் இருப்பவனும் அவனே. அந்த இடங்களாக இருப்பவனும் அவனே. ஆகவே இங்கும் அங்கும் எங்கும் போகவேண்டியவனில்லை.
அந்த நூலை எடுத்துப்பார்த்த கிருதவீர்யன் அதன்படி சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இருந்தான்.
மஹாவிஷ்ணுவிடம் விஜயந்தா என்னும் கதையும், சுதர்சனம் என்னும் சக்கரமும் இருந்தன. அவற்றில் சுதர்சன சக்கரத்துக்கு கர்வம் மேலிட்டது. என்னடாது.....ஆயுதத்துக்கெல்லாம் கர்வமாவது என்று நினைக்கத ்தோன்றும். தெய்வீக ஆயுதங்கள் உள்ளதைச் சொல்லும்; சொன்னதைச் செய்யும்; அதுபோக மற்றதுகளும் தெரியும்.
இதையறிந்த மஹாவிஷ்ணு அதை மனிதனாகப் பிறக்குமாறு ஆணையிட்டுவிட்டார்.
பிள்ளைவரம் வேண்டி தவமிருக்கும் கிருதவீர்யனுக்கு மகனாக சுதர்சனம் பிறந்தது.
கிருதவீர்யன் தன்னுடைய மகனுக்கு அர்ஜுனன் என்று பெயர் வைத்தான்.
ஆனால் ரொம்பவும் சந்தோஷப்படமுடியவில்லை.
அர்ஜுனன் கைகளும் கால்களுமில்லாமல் பிறந்திருந்தான்.
வயது வந்ததும் வாழ்க்கை வெறுத்துப்போன அர்ஜுனன் தன்னை ஒரு காட்டில் கொண்டுபோய் விடச்செய்தான். அங்கிருந்த ஒரு தடாகத்தின் கரையில் ஒரு மரத்தடியில் அவனை விட்டார்கள்
அங்கிருக்கும்போது ஒரு ரிஷி அவனைக் கண்டு அவனுக்கு விநாயக ஏகாக்ஷரி என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.
அதனைக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஜபம் செய்து தவமியற்றினான் அர்ஜுனன்.
விநாயகர் தடாகத்தில் தோன்றினார். அவருடைய பாதங்களில் விழ அவனால் முடியவில்லை. அவனை விநாயகர் அழைத்தார். அவனுக்கு இரு கால்களும் ஆயிரம் கைகளையும் எல்லையில்லா பராக்கிரமத்தையும் அளவற்ற பலத்தையும் கொடுத்தார். அத்துடன் பவளத்தால் ஆன விநாயக விக்ரத்தையும் தந்தார்.
காட்டிற்குள் தரணிதரம் என்னும் பெரிய நகரத்தை ஏற்படுத்திக்கொண்டு பேரரசனாக ஆண்டுவந்தான்.
பவளவிநாயகரை 'தரணீதர விநாயகர்' என்று பெயரிட்டு வழிபட்டான்.
விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன் கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும்.
அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல வரங்களையும் பெற்றான்.
அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்தானே சொல்லவேண்டும் - குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப் பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி.
விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும் உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள்.
குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான்.
தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும் லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான்.
விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர் அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும் கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.
ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான். சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.
மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது.
சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத் தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார்.
மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு நசுக்கியது.
வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது.
![]()
![]()
பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல் அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச் சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும் பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான்.
மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல் முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும் பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்படமுடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார்.
சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான் அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம் கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.
அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார்.
'ராவணம்' என்றால் 'அலறல்'.
இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து, பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு, "கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார்.
பலவரங்களும் ஆயுதங்களும் பெற்ற ராவணன் மூவுலகங்களையும் வென்று அடக்கினான். தேவர்கள் அவனுடைய ஏவலாட்களாக ஆகினர். நவக்கிரகங்கள் அவனுடைய சிம்மாசனத்துக்கு ஏறும் படிப்பட்டுகளாக ஆகின.
தனக்கு இந்த வாழ்வைத் தந்த சிவனை மறவாது எப்போதும் தவறாது பூஜை செய்துவந்தான்.
ஒருநாள் ஒரு ஆற்றங்கரையில் இருந்து பூஜை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ராவணனை அடித்துக்கொண்டு போயிற்று. சிவபூஜையும் குலைந்துவிட்டது.
ஆத்திரமடைந்த ராவணன் திடீர் வெள்ளமேற்பட்ட காரணத்தை அறியச்சென்றான்.
சமஸ்கிருதத்தில் ஒரு வழக்கு உண்டு. தந்தையின் பெயரையோ தாயின் பெயரையோ மூதாதையின் பெயரையோ தன்னுடைய பெயராக்கிக் கொள்ளலாம்.
தசரதன் மகன் தாசரதி.
ஜனகன் மகள் ஜானகி
விஸ்ரவாஸ் மகன் வைஸ்ரவன்
குருவின் தோன்றல்கள் கௌரவர்.
யது வம்சத்தான் யாதவன்
ரகுவின் வழித்தோன்றல் ராகவன்
பல அர்ஜுனர்கள். அவர்களிடமிருந்து வேறு படுத்திக்கொள்வதற்காக அர்ஜுனன் தனக்கு 'Son of' Prefix கொடுத்துக்கொண்டு அர்ஜுனன் son of கிருதவீர்யன் - 'கார்த்தவீர்ய அர்ஜுனன்' ஆகிவிட்டான்.
தூரத்தில் ஆற்றில் கார்த்தவீர்யார்ஜுனன் தன்னுடைய பல மனைவிகளுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தான். ஆற்றின் குறுக்கே தன்னுடைய ஆயிரம் கைகளையும் வைத்து தண்ணீரை அணை போல் தேக்கிவைத்து அதில் நீந்திக்குளித்துக்கொண்டு திடீரென்று கைகளை எடுத்துவிடும்போது அடைபட்ட தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப்பெருக்குபோல் வந்திருக்கிறது. அதுதான் ராவணனின் சிவபூஜையைக் குலைத்துவிட்டது.
கோபப்பட்ட ராவணன் கார்த்தவீர்யனைக் குத்தச்சென்றான்.
கார்த்தவீர்யன் திரும்பிக்கூடப் பார்க்காமல் குத்தச்சென்ற கையைப் பிடித்துக்கொண்டான். அவனுக்குத்தான் இருபது கையாச்சே. இன்னொரு கையால் குத்தினான். அதை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டான். இப்படி ஒவ்வொரு கையையும் கால்களையும் பிடித்துக்கொண்டுவிட்ட பின்னரும் கார்த்தவீர்யனின் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு கைகள் மீதமிருந்தன.
பார்த்தான் ராவணன்.
கொஞ்சமும் விசும்பமுடியவில்லை. மூச்சு முட்டியது. பார்க்குமிடமெல்லாம் கைகள், கைகள், கைகள் -
எல்லாமே கார்த்தவீர்யனின் கைகள்.
என்ன செய்யலாம் என்று கார்த்தவீர்யன் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஏனெனில் ராவணைன் வரங்கள் இருக்கின்றன. ஆகவே அவனைக் கொல்லவும் முடியாது.
கடைசியில் ராவணனின் பரிதாப நிலையைப் பார்த்து அவனை விரட்டிவிட்டான்.
இரண்டாவது ஆள்:
ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள்.
ஒருமுறை கயிலைக்கு சிவனைப் பார்க்க வந்திருந்தார். சிவனுக்கும் ஐந்துதலைதான் என்பதாலும் தாமே படைப்புக்கடவுள் என்பதாலும் பிரம்மா மிகுந்த செருக்குடன் வந்தார்.
இதனை அறிந்த சிவபெருமான் பிரம்மாவுடைய ஐந்தாவது தலையைப் பற்றித் திருகிக் கிள்ளிப் பறித்துவிட்டார்.
பிரம்மாவுக்கு நாலுதலையாகிவிட்டது.
வலி தாங்காமல் பிரம்மாவின் கண்களிலிருந்து நீர் சிந்தியது.
அந்த பிரம்ம கண்ணீர்த்துளிகள் ஒரு மனிதனாக மாறின.
ஆனால் சிவனுடைய கையில் பிரம்மாவின் கபாலம் ஒட்டிக்கொண்டுவிட்டது. பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் சிவனுடைய தோற்றமும் தன்மையும் மாறிவிட்டது.
நிர்வாண உருவுடன் தலையில் ஜ்வாலாமகுடம், இடையில் நாகாபரணம், நாக உபவீதம், நாக சன்னவீரம், நாகஹாரம்; கையில் டமருகம், பாம்பு, திரிசூலம், பிரம்ம கபாலம்; நாய் வாகனம்.
இவற்றுடன் காசியில் பிச்சைக்காகத் திரிந்தார்.
பிரம்மாவின் கண்ணீர்த்துளி மனிதன் சிவனை விரட்டிக்கொண்டு வந்தான்.
அப்போது பிரம்ம கபாலத்தில் விஷ்ணு பிச்சையிட்டார்.
சாதாரணப் பிச்சையல்ல.
தம்முடைய ரத்தத்தையே பிச்சையாக இட்டார்.
அந்த ரத்தத்திலிருந்து ஒரு மனிதன் தோன்றினான்.
அவன் பிரம்ம கண்ணீர்த்துளி மனிதனைத் தடுத்து எதிர்த்தான்.
இருவரும் போரிட ஆரம்பித்தனர்.
மஹாவிஷ்ணுவின் ஆணைப்படி அவர்கள் பிறவிகள் எடுத்து அந்தப் பிறவிகளில் தங்களுடைய விரோதத்தைக் காட்டிக்கொண்டு போரிட்டு, ஒருவரை ஒருவர் கொன்று, அதன் பின்னர் தம்மிடம் வந்து சேரும்படி ஆயிற்று.
கிஷ்கிந்தை என்னும் நகரம் வானரர்களுக்குரியது.
அங்கு வானர ராஜா ஒருவன் இருந்தான்.
அவனுடைய மகள் ஒரு பேரழகி.
வானர இளவரசி எப்படி பேரழகியாக இருக்கமுடியும் என்று கேட்கத் தோன்றும். ஜாம்பவான் ஒரு கரடி. கரடிக்கு ஜாம்பவதி என்றொரு மகள். பேரழகி. கிருஷ்ண பரமாத்மா அவளைத் திருமணம் செய்துகொள்வார்.
கரடிராஜாவுடைய மகள் பேரழகி என்னும்போது வானரராஜாவின் மகளும் பேரழகியாகலாம்தானே.
அந்த இளவரசி உலாவிக்கொண்டிருந்தபோது இந்திரனும், சூரியனும் அவளைப் பார்த்துவிட்டார்கள்.
அவளைப் பார்த்தவுடனே இந்திர வீர்யமும் சூரிய வீர்யமும் அவளுக்குள் சேர்ந்துவிட்டது.
இரு குழந்தைகள் பிறந்தன.
இந்திரனின் மகன் வாலி. நேர்த்தியான வால் அவனுக்கு.
சூரியனின் மகன் சுக்கிரீவன். சிறந்த கழுத்து இவனுக்கு.
இவர்கள் வேறு யாருமல்ல.
பிரம்ம கண்ணீர்த்துளிக்காரன்தான் இந்திரன் மகனான வாலியாகப் பிறந்தான்.
விஷ்ணுவின் ரத்தத்திலிருந்து தோன்றியவன் சூரியனுடைய மகனாகிய சுக்கிரீவன்.
இவர்களில் வாலி வானர அரசனாகினான். மிகுந்த பலசாலி. அவன் வரங்கள் பல பெற்றவன். எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் ஏழு மராமரங்கள் ஒரே கோட்டில் வரும் ஒரு சின்னஞ்சிறு கண நேரத்துக்குள் ஏழையும் துளைத்துச்செல்லும்வண்ணம் யார் அம்பு விடுகிறார்களோ அவர்களே வாலியைக் கொல்லமுடியும்.
இன்னொரு வரம் இன்னும் சிக்கலானது. வாலியை எதிர்த்து யார் போரிட வருகிறார்களோ, அவர்களை வாலி பார்த்த மாத்திரத்தில் எதிர்த்து வருகின்றவர்களின் பலத்தில் சரிபாதி வாலிக்கு வந்து விடும்.
ஏற்கனவே வாலி மிகுந்த பலசாலி. அவனளவுக்கு வேறு யாரும் பலம் படைத்தவர்கள் வெகு சிலரே.
அப்படியே இருந்தாலும்கூட வாலியை யாரும் நேருக்கு நேர் எதிர்த்து நின்று சண்டையிடமுடியாது. ஏனெனில் மிகுந்த பலசாலியாகிய வாலியின் இயற்கையான பலத்துடன் எதிரியின் பலத்தில் பாதியும்
சேர்ந்துகொண்டுவிடும். எதிரியின் பலமும் பாதியாகிவிடும்.
அப்பேற்பட்ட வாலியும் சிறந்த சிவ பக்தன். ஒரே காலைவேளையில் நான்கு திசைகளிலும் உள்ள சமுத்திரக்கரைகளுக்குச் சென்று அங்கு சிவபூஜை செய்வான்.
அவ்வாறு ஒருமுறை சிவபூஜை செய்யும்போது, ராவணன் அந்தப் பக்கம் வந்தான்.
'என்னடாது.....? குரங்கு.......சிவபூசை செய்வதாவது!' என்று அருகில் வந்து பார்த்தான். அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.
ஆகவே வாலியைத் தொந்தரவு செய்தான். வாலி அவனை அசட்டை செய்தான்.
ராவணன் வாலியின் வாலைப் பிடித்துத் தூக்கி எறிவதற்குப் போனான்.
வாலி திரும்பவேயில்லை. தேவையும் ஏற்படவில்லை.
வாலியின் வால் மட்டும் தானாகவே நீண்டு வளைந்து ராவணனின் உடலில் சுற்றி இறுக ஆரம்பித்தது.
ராவணனின் பத்துத்தலைகள் மட்டுமே வெளியில் தெரிந்தன.
இதே நிலையில் ராவணனை வைத்துக்கொண்டிருந்தான் வாலி.
அந்தக் கரையில் சிவபூஜை முடிந்தபிறகு இன்னொரு கரைக்கு வாலி சென்றான். அப்போது வாலில் கட்டியிருந்த ராவணனை வாலி கண்ட கடவெல்லாம் தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றான்.
இப்படியாக நான்கு சமுத்திரக்கரைகளுக்கும் சென்று சிவபூஜை செய்தபிறகு, தன்னுடைய அரண்மனைக்கு வாலி சென்றான்.
அங்கு அவனுடைய குழந்தையாகிய அங்கதன் படுத்திருந்த தொட்டிலின் குறுக்குக் கம்பத்தில் அவனைக் கட்டி அங்கதனிடம் விளையாடக் கொடுத்துவிட்டான்.
அங்கதனும் ராவணனின் தலைகள், கைகள் எல்லாவற்றையும் பிடித்து இழுத்து இம்சை செய்தான்.
கடைசியில் அவன் மன்றாடி மன்னிப்புக் கேட்டவுடன், வாலி அவனை விடுவித்தான்.
இருவரும் நட்புக்கொண்டதுடன் கிஷ்கிந்தையின் பக்கத்திலேயே வருவதில்லை என்று ராவணன் உறுதிமொழி தந்தான்.
ராவணன் மிகுந்த பலசாலி. அவனை வெல்ல முடிந்தவர் இல்லை என்று நம்பப்பட்ட காலத்தில் அவனை வென்றவர்கள் இருவர்.
ஒருவன் கார்த்தவீர்யார்ஜுனன்.
இன்னொருவன் வாலி.
ஆகவே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பால்கடலைக் கடைவதில் உதவி செய்வதற்கு வாலியையும் கார்த்தவீர்யார்ஜுனனையும் அழைத்தார்கள்.
Tug-o-war என்னும் கயிறு இழுக்கும் போட்டி பள்ளியிலும் கல்லூரியிலும் இருக்கும். அதில் பலசாலிகளாகவும் இருந்து பெரிய உருவமும் படைத்தவர்களை Anchor-men என்ற கடைசி ஆட்களாகப் போடுவார்கள்.
மற்றவர்கள் கயிற்றைப் பிடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால் நங்கூர ஆசாமியோ கயிற்றின் ஒரு முனையைத் தன் உடம்பில் நன்கு சுற்றிக்கொண்டிருப்பார்.
அதுபோல.....
வாசுகிப் பாம்பின் தலைப் பகுதியில் நங்கூர மனிதனாகக் கார்த்தவீர்யார்ஜுனனும் வால் பகுதியில் வாலியும் இருந்துகொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள்.
அந்தக் காட்சியைத்தான் அகத்தியர் ·போட்டோப்பகுதியில் கடைசி மூன்று படங்களிலும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
வாலி, கார்த்தவீர்யார்ஜுனன், கூர்மாவதார விஷ்ணு ஆகியவர்கள் இருக்கும் படங்களைக் காணலாம்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக