செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




சனி, 14 மே, 2011

கோழியைப் பாடும் வாயால்....

                                                                  சிவகவியான
                                                      பொய்யாமொழிப புலவரை
                                                                        முருகன்
                                                              தடுத்தாட்கொள்ளல்

இது பொய்யாமொழிப்புலவருக்கும் முருகனுக்கும் இடையே நடந்த சம்பவம்.
                 


                முருகனுக்குத் தமிழின்மீது அடங்காக்காதல். தன்னை வலிந்து பாடுமாறு அடியார்களைச் செய்தவன். ஔவையார், அருணகிரியார், குமரகுருபரர், ஆதி சங்கரர், தேவராயசுவாமிகள், வள்ளிமலை சச்சிதாநந்த சுவாமிகள், கிருபாநந்தவாரியார் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
                அந்த வரிசையில் அடங்கிய பெரும்புலவர் ஒருவர்தான் பொய்யாமொழிப் புலவர். அவருடைய வாழ்க்கைச்சரிதத்தை 'சிவகவி' என்னும் பெயரில் அக்காலத்தில் படமாக்கியிருக்கிறார்கள். பொய்யாமொழியாக எம்கே தியாகராஜபாகவதர ் நடித்திருப்பார். 

                 
                படத்தில் அவரை சிவபக்தராகக் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர் உண்மையிலேயே ஒரு சக்தி உபாசகர். சக்தியை - குறிப்பாக காளியையே வழிபட்டிருக்கிறார். அவருக்கு வாக்குவன்மை இருப்பதைக் காட்டிக் கொடுத்தவளே வயிரபுர மாகாளிதான்.
                அக்காலத்தில் மதுரை சங்கத்தார் கோயிலுக்குச் சென்று, தானும் சங்கப் புலவர்களுக்குச் சமமானவன் என்று சிலைவடிவில் இருந்த சங்கப்புலவர்களைச் சொல்லவைத்து அங்கீகாரம் பெற்றார் என்று அவருடைய செவிவழி வரலாறு சொல்லும். அத்துடன் நின்றுபோயிருந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னனின் ஆதரவோடு மீண்டும் நிறுவினார் என்றும் அந்த வரலாறு கூறும். சீனக்கன் என்னும் வள்ளல் ஒருவரின் தயவில் வாழ்ந்தவர். அவருடன் மிக நெருங்கிய நட்புக் கொண்டவர். அவ்வள்ளல் இறந்த சமயத்தில் பொய்யாமொழியும் உடன்கட்டை ஏறினார்.


                தீவிர சக்தி உபாசகராகிய பொய்யாமொழி சக்தியைத் தவிர வேறு தெய்வங்களை வணங்கமாட்டார். அதுவும் முருகனின் பேரில் ஏனோ ஓர் இளக்காரம். 'கோழியைப் பாடும் வாயால் கோழிக்குஞ்சை நான் பாடுவேனோ' என்று அடிக்கடி சொல்வார்.
                கோழி என்பது இங்கே சக்தியைக் குறிக்கும். கோழிக்குஞ்சு என்று முருகனைக் குறிப்பிட்டார்.
ஆனால் சிவகவி படத்தில் சிவனைப் பாடும் வாயால் முருகனைப் பாடுவேனோ என்ற கருத்தில் பொய்யாமொழிப்புலவர் பாடுவதாக அமைத்துவிட்டார்கள்.

இதனைத்தான் 'சிவகவி' படத்தில்,

'வள்ளலைப் பாடும் வாயால்,- அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ;
எந்தன் சுவாமியைப் பாடும் வாயால்,- தகப்பன்
சுவாமியைப் பாடுவேனோ;
அப்பனைப் பாடும் வாயால் - ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ -
என் அம்மை அப்பனைப் பாடும் வாயால் -பழனியாண்டி
சுப்பனைப் பாடுவேனோ
வள்ளியின்கண் வலை வீசிடும் வேடன்
கள்ளனைப் பாடுவேனோ;

அம்பிகைபாகன் என்னும் அகண்ட சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம்பெறும்
தம்பியைப் பாடுவேனோ',

என்றெல்லாம் எம்கேட்டீ பாடுவதாக அமைத்துவிட்டார்கள்.

                இப்படி பொய்யாமொழியின் வாயால் சிறுமைப் படுத்தபட்டுவந்த முருகன் தருணம் பார்த்துக் காத்திருந்தான்.

                தருணமும் வாய்த்தது.

                ஒருமுறை பொய்யாமொழி காட்டுவழியே இன்னொரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு திருடன் எதிரில்வந்து பாதையை மறித்துக்கொண்டான்.

                "ஓய்! மடியில இருக்குறதையெல்லாம் எடு".
                ஐயா, நான் ஏழைப் புலவன். பாடிப் பிறர் தயவால் வயிற்றைக் கழுவிக் கொள்பவன். என்னிடம் ள்ளதெல்லாம் தமிழ்தான்.வேறு பொருளன்றும் கிடையாது".
                "அப்படியா சங்கதி? அப்படியானால் என்னைப் பாட்டுடைத் தலைவனா வச்சுப்பாடேன், பாக்கலாம்."
                "பாட்டுடைத் தலைவனென்றால்...... உங்களின் பெயர் தெரியவேண்டுமே?"
                "ஓஹோ! சரி, சரி. என்னுடைய பெயர் 'முட்டை'. என்னைப்பாடு, இப்போது."

                பொய்யாமொழி பாடினார்.

பொன்போலும் கள்ளிப்பொறி பறக்கும்கானலிலே
என்பேதை செல்லற்கியைந்தனளே - மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாயதெவ்வர் போம்
கானவேல் முட்டைக்கும் காடு.

                "யோவ்! இதன் பொருள் என்ன?"

"மின்னலைப்போல ஒளிவீசிச்சுடர்கின்ற சிறப்புமிக்க வேலாயுதத்தையுடைய முட்டை என்னும் பெருவீரருக்கு மாறான எதிரிகள் ஓடி ஒளிந்துகொள்கின்ற காட்டில், பல வேல மரங்கள் மிகுந்துள்ளன;
அங்கு சூரியனின் உஷ்ணத்தினால் கள்ளிச்செடிகளும் சூடேறி பொன்போன்ற பொறிகளைப் பறக்கவிடுகின்றன.
அக்கானகத்தில் வேல முட்களும் காலில் தைக்கக்கூடிய வழியில் தன் தலைவனோடு இந்தப்பெண் செல்லத்துணிந்தனளே!  இதுதான் பொருள்".
(கானவேல் முட்டைக்கும் - கானவேல் முள்+தைக்கும். காட்டில் உள்ள வேல மரத்தின் முள் தைக்கும்)

                "யோவ்! இதெல்லாம் பாட்டாய்யா? ஒஹோன்னானாம்! ஏன்ய்யா! கள்ளிச்செடியே கனல்தெறித்துப் பொறி பறக்குது! இந்த லெட்சணத்துல இத்தினிக் காண்டி வேலமுள் மட்டுமே எப்படீய்யா பொசுங்கிக் கருகிச் சாம்பலாகாமெ இருக்கும்?"

                அயர்ந்து போனார் பொய்யாமொழி.

                "சரி. நானே பாடுறேன். கேட்டுக்கோ".
   
விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும், வீழின்
எழுந்து சுடர்சுடுமென்றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே
பொய்யாமொழிப் பகைஞர் போல்.

'வளமான மேகங்கள் தம்மிடத்திலிருந்து விழும் மழைத்துளிகள் அந்தக் கானகத்தில் விழும்போது, அந்தரத்திலேயே வெப்பமடையும் என்றும், அப்படியே தரையில் விழுந்தாலும் கீழேயுள்ள அனல் மேலே சென்று சுடும் என்றும் பயந்துகொண்டு, மேகங்கள் மழையைப் பொழியவும் அஞ்சுகின்ற காட்டினிலே, பொய்யாமொழிப் புலவரின் பகைவர்கள் செல்வது போல, வளையல் தரித்த அந்தப் பெண் தன் தலைவனோடு சென்றாளே!'

                "இதான்ய்யா கவிதைங்க்றது".
                "அதெல்லாம் சர்த்தான். கோழியத்தான் பாடுவேன்; கோழிக்குஞ்சைப் பாடவேமாட்டேன்னுட்டு சொல்லிக்கிட்டே திரிஞ்சியே? இப்பஎன்ன ஆச்சு? குஞ்சவிட சிறுசு - போயும்போயும் முட்டய பாடிப்பிட்டியே!"

                இப்படித்தான் பொய்யாமொழியை முருகன் தடுத்தாட்கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக